கீவ்: உடனடி ராணுவ உதவி அனுப்பிவைக்குமாறு மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரேன் பிப்ரவரி 7ஆம் தேதியன்று அழைப்பு விடுத்துள்ளது. உக்ரேனுக்கு பீரங்கிக் குண்டுகளை சீக்கிரம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது.
அண்மையில் தலைநகர் கீவ்வையும் உக்ரேனின் மற்ற பகுதிகளையும் குறிவைத்து ரஷ்யா ஏவுகணைகளைப் பாய்ச்சியது.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக கீவ்வில் நான்கு பேர் மாண்டனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ரஷ்யா அதன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அதற்குப் பதிலடி கொடுக்க பீரங்கிக் குண்டுகள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் உக்ரேன் கூறியது.
“ரஷ்யா பாய்ச்சும் ஒவ்வொரு ஏவுகணைக்கும் பதிலடி கொடுப்போம்,” என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமியர் ஸெலென்ஸ்கி சூளுரைத்துள்ளார்.
“எங்கள் பாதுகாப்பை வலுப்படுத்துவது மட்டுமல்ல, ரஷ்யாவுக்கு அதிகபட்ச இழப்புகளை ஏற்படுத்துவதே எங்கள் இலக்கு,” என்றார் திரு ஸெலென்ஸ்கி.
ஆளில்லா வானூர்திகள், ஏவுகணைகள், போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்கான ஆயுதங்கள் ஆகியவற்றை தங்களுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்தி வருவதாக உக்ரேனின் ராணுவத் தளபதி வெலரி ஸலுஷ்னி தெரிவித்தார்.