ஹவானா: கியூபாவில் 133 டன் கோழிகளைத் திருடி விற்றதாக 30 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டுத் தலைநகர் ஹவானாவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. 1,660 வெள்ளைப் பெட்டிகளில் கோழிகள் திருடப்பட்டன.
அவற்றை விற்று குளிர்பதனப் பெட்டிகள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற பொருள்களை வாங்க அந்தக் கோழிகள் திருடப்பட்டதாக கியூபா அரசாங்கத்துக்குச் சொந்தமான தொலைக்காட்சி தெரிவித்ததென ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் பங்கீட்டுத் திட்டத்தின்கீழ் அக்கோழிகளை மக்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவின் தலைமையில் இந்தப் பங்கீட்டு முறை 60 ஆண்டுகளுக்கும் முன்பு தொடங்கப்பட்டது.
திருடப்பட்ட கோழிகளை நடுநிலை பரப்பளவைக் கொண்ட மாநிலத்தில் வசிக்கக்கூடியவர்களுக்கு ஒரு மாத காலத்துக்கு விநியோகிக்க முடியும் என்று கியூபா அரசாங்கத்தின் கொப்மார் எனும் உணவு விநியோக அமைப்பின் இயக்குநர் ரிகொபெர்ட்டோ முஸ்டெலியெர் குறிப்பிட்டார்.
அண்மை ஆண்டுகளில் பங்கீட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கோழிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. கியூபாவின் பொருளியல் நெருக்கடியால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால், உணவு, எரிபொருள், மருந்து ஆகியவற்றுக்கான தட்டுப்பாடு தலைதூக்கியுள்ளது. கியூபாவில் சலுகை விலையில் வழங்கப்படும் பொருள்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல மாத கால தாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு கியூபா, பொருளியல் நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டில் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளன.
எனினும், அங்கு பெரிய அளவிலான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவது அரிது.