ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்றது.
அதிபர் தேர்தலுடன் நாடாளுமன்றத்துக்கான வாக்களிப்பும் ஒரே நாளில் நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் 580 இடங்களுக்காக 18 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 9,917 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்களிப்பு சிங்கப்பூர் நேரப்படி பிப்ரவரி 14ஆம் தேதி காலை 6 மணிக்கு இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் தொடங்கியது.
சிங்கப்பூர் நேரப்படி பிப்ரவரி 14ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு இந்தோனீசிய அதிபர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவுபெற்றது.
இத்தேர்தலில் 200 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.
இதுவே உலகத்தில் நடத்தப்பட்ட ஆகப் பெரிய ஒரு நாள் தேர்தல் என்று கூறப்படுகிறது.
இந்தோனீசியாவெங்கும் ஆயிரக்கணக்கான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
அதிபர் பதவிக்காக முன்னாள் ராணுவ ஜெனரல் திரு பிரபோவோ சுபியாந்தோ, முன்னாள் மத்திய ஜாவா ஆளுநர் திரு கஞ்சார் பிரனோவோ, முன்னாள் ஜகார்த்தா ஆளுநர் திரு அனீஸ் பஸ்வேடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திரு பிரபோவோவின் துணை வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகனும் சோலோ நகரின் மேயருமான 36 வயது திரு ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்கா களமிறங்குகிறார்.
அதிபர் தேர்தல் தொடர்பாக இரண்டு கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன.
திரு பிரபோவோ தேர்தலில் வெற்றி பெற்று இந்தோனீசியாவின் அடுத்த அதிபராவார் என்று இரண்டு கருத்துக்கணிப்புகளிலும் முன்னுரைக்கப்பட்டுள்ளன.
கருத்துக் கணிப்புகளில் திரு அனீஸ் பஸ்வேடன் இரண்டாவது இடத்தையும் திரு கஞ்சார் பிரனோவோ மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இந்தோனீசியாவின் தேர்தல் விதிமுறைகளின்படி, வாக்குச் சீட்டுகளை எண்ணும் பணிகள் அதிகபட்சம் 35 நாள்களுக்குள் நிறைவுபெற வேண்டும்.
இந்தோனீசியா மிகப் பெரிய பரப்பளவைக் கொண்ட நாடு.
பல மாநிலங்கள், தீவுகள் எனப் பல்வேறு இடங்களில் மில்லியன்கணக்கான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
எனவே, நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வாக்குச் சீட்டுகளையும் எண்ணி முடித்து, இறுதி முடிவை உறுதி செய்ய நாள்கள் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் மார்ச் மாதம் 20ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்தோனீசியப் பொதுத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.