சிட்னி: ஆஸ்திரேலிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 16) சிட்னியில் உள்ள பல பூங்காக்களில் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் தழைக்கூளத்தில் கல்நார் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் பூங்காக்களின் பல பகுதிகளைச் சுற்றி தடுப்பு போட்டுள்ளார்கள்.
கல்நார் இழைகளை சுவாசிக்கும்போது நுரையீரல் பாதிப்பும் புற்றுநோயும் உண்டாகக்கூடும் என்று ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜனவரி மாதத்தில், சிட்னியின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் கல்நார் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நிலத்தடிசாலைச் சந்திப்பிற்கு மேல் கட்டப்பட்ட பூங்காவிற்கு அருகிலுள்ள பல இடங்களில், மறுசுழற்சி செய்யப்பட்ட தழைக்கூளம் காணப்பட்டன.
அதைத்தொடர்ந்து, போக்குவரத்து திட்டங்கள் மேற்கொள்ளப்படும் இடங்கள், ஒரு தொடக்கநிலை பள்ளி, பேரங்காடி, மருத்துவமனை உட்பட சுமார் 20 நகர தளங்கள் மாசடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டது .