கோலாலம்பூர்: சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் மலேசியப் பொருளியலில் மீள்திறன் தென்பட்டதாகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்று விழுக்காடு வளர்ச்சியடைந்ததாகவும் அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மலேசியப் பொருளியல், சென்ற ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2.9 விழுக்காடும் மூன்றாம் காலாண்டில் 3.3 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது. இதற்குப் பல முக்கியக் காரணங்கள் இருப்பதாக மலேசிய மத்திய வங்கி குறிப்பிட்டது.
“ஊழியரணி நிலவரம் மேம்பட்டு வருவதும் பொருள் விலை நெருக்குதல் சீராகி வருவதும் குடும்பங்கள் செலவினத்தைக் கையாள உதவியாக இருந்தன. கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய காலத்தில் இருந்தததைப் போல் வேலையின்மை விகிதம் 3.3 விழுக்காட்டுக்குக் குறைந்தது. 2023ஆம் ஆண்டில் வேலையில் இருப்போர் அல்லது வேலை தேடிக்கொண்டிருப்போரின் எண்ணிக்கை வரலாறு காணா அளவில் பதிவானது,” என்று அறிக்கை ஒன்றில் மலேசிய மத்திய வங்கி தெரிவித்தது.
பொருளியல் வளர்ச்சியில் முதலீட்டு நடவடிக்கைகள் அதிகரித்ததும் முக்கியப் பங்கு வகித்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டது. நீண்டகாலத் திட்டங்கள் நிறைவடைந்ததும் வர்த்தகங்கள் தங்களை விரிவுபடுத்திக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளும் அதற்கு உறுதுணையாக இருந்தன.
எனினும், பொருளியல் சில சவால்களையும் எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. உலக வர்த்தகம் மெதுவடைந்திருப்பது, உலக தொழில்நுட்பத் துறை எதிர்நோக்கும் சிரமங்கள் போன்றவை சவால்களில் அடங்கும்.
சென்ற ஆண்டு நான்காம் காலாண்டில் மலேசியாவின் மூலாதாரப் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து 1.6 விழுக்காடாகப் பதிவானது. மூன்றாம் காலாண்டில் அந்த விகிதம் இரண்டு விழுக்காடாக இருந்தது.
நாணயச் செலாவணியைப் பொறுத்தவரை நான்காம் காலாண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 2.1 விழுக்காடு வலுவடைந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து இந்த வட்டார நாடுகளின் நாணயங்கள் பொதுவாக வலுவடைந்ததைத் தொடர்ந்து ரிங்கிட்டின் மதிப்பும் கூடியது.
மலேசியப் பொருளியல் தொடர்ந்து வலுவடையும் என்று மத்திய வங்கி கணித்துள்ளது. உள்ளூர் செலவினம் வலுவாக இருப்பது அதற்கான காரணங்களில் ஒன்று.