கத்தார்: இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்துக்கு இடையே நடக்கும் போரை நிறுத்த மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை அண்மைய நாள்களில் நம்பிக்கை தருவதாக இல்லை என்று அந்தப் பேச்சுவார்த்தையில் நடுவராக செயல்படும் கத்தார் கூறியுள்ளது.
இதுபற்றிக் கூறிய கத்தார் பிரதமர் முகம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, பேச்சுவார்த்தையில் தாம் இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். எனினும், காலம் சாதகமாக இல்லை எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் அனைத்துலக நெருக்குதல் அதிகரித்து வரும் வேளையிலும் காஸாவின் ராஃபா பகுதியில் தனது ராணுவம் தரைத் தாக்குதலை தொடரும் என்று அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, சண்டைநிறுத்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் சண்டைநிறுத்த உடன்பாடு ஒன்றை ஏற்படுத்த கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவது இங்கு நினைவுகூரத்தக்கது.
“கடந்த சில நாள்களாக பேச்சுவார்த்தையின் போக்கு பெரிதாக நம்பிக்கை தரும் வகையில் இல்லை. எனினும், நான் அடிக்கடி கூறிவந்துள்ளதைப்போல், நாங்கள் எப்பொழுதும் நம்பிக்கையுடன் இருப்போம், ஒப்பந்தம் ஏற்பட தொடர்ந்து முயற்சி மேற்கொள்வோம்.
“சண்டைநிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நாம் பெரிய அளவில் மேற்கொண்டு வருகிறோம். எனவே மனிதநேய பிரச்சினையைக் கையாள்வதில் சில சிக்கல்கள் இருப்பதை இன்னமும் காண்கிறேன்,” என்று மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் கத்தார் பிரதமர் கூறினார்.
அமெரிக்க அதிபர் கேட்டுக்கொண்டபடி சண்டைநிறுத்தப் போச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பேராளர்களை அனுப்பியது. எனினும், ஹமாஸ் இயக்கத்தின் கோரிக்கைகள் அவர்கள் கனவுலகில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டியது. அதனால், மீண்டும் இஸ்ரேலியப் பேராளர்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சனிக்கிழமையன்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
மேலும், பாலஸ்தீனர்களுக்கு தனிநாடு வழங்குவது குறித்து அனைத்துலக நெருக்குதல்களுக்கு தான் செவிசாய்க்கப் போவதில்லை என்று அவர் கூறினார். அது குறித்த ஒப்பந்தம் எவ்வித முன்நிபந்தனையும் இல்லாமல் சம்பந்தப்பட்ட தரப்புகளிடையே நேரடிப் பேச்சுவார்த்தையின் மூலமே சாத்தியம் என்று அவர் விளக்கமளித்தார்.
எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் நடுவர்களாக இருந்து சண்டைநிறுத்தம், 100க்கும் மேலான பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், ஹமாஸுக்கு எதிரான போர் 2025ஆம் ஆண்டுவரை நீடிக்கும் என தான் எதிர்ப்பதாக திரு நெட்டன்யாகு காஸா பகுதிக்கு அருகில் வசிக்கும் சமூகங்களின் உள்ளூர் தலைவர்களிடம் கூறியதாக நம்பப்படுகிறது.