தோக்கியோ: ஜப்பானின் ஃபுக்குஷிமா தயிச்சி அணுமின் நிலையத்திலிருந்து கழிவு நீர் வெளியேற்றம் மார்ச் 15ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு ஃபுக்குஷிமாவில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கையாக அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அணுமின் நிலையம் தெரிவித்தது.
2011ஆம் ஆண்டு சுனாமியால் அந்த அணுமின் நிலையம் பாதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை வெளியேற்றும் நடைமுறை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டெப்கோ நிறுவனம், கழிவு நீர் சுத்திகரிப்பு, வெளியேற்றக் கட்டமைப்பில் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்று கூறியது.
அந்தக் கட்டமைப்பு மாசடைந்த நீரிலிருந்து, இயற்கையாகக் காணப்படும் ‘டிரிட்டியம்’ எனும் வேதிப்பொருளைத் தவிர, மற்ற கதிரியக்கப் பொருள்கள் அனைத்தையும் அகற்றிவிடும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவு நீர் வெளியேற்றம் தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியது.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவுக்குப்பின் 14 நிமிடங்கள் கழித்து ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, ஃபுக்குஷிமா அணுமின் நிலையங்களில் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்று ஜப்பானின் அணுசக்திக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்தது.
அந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக உடனடித் தகவல் ஏதுமில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
2011ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்தில் கிட்டத்தட்ட 540 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்புவதற்கு ஈடான கழிவு நீர் தேங்கியிருந்தது. அதை சுத்திகரிப்பிற்குப்பின் பசிபிக் பெருங்கடலில் விடுவிக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கியது. ஐக்கிய நாட்டு அணுசக்தி அமைப்பின் ஒப்புதலோடு அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால் ஜப்பான் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதாக சீனாவும் ரஷ்யாவும் குறைகூறுகின்றன.