லண்டன்: காஸாவுக்கு அனுப்பப்படும் உதவிகளை வேண்டுமென்றே இஸ்ரேல் தடுக்கிறது என்று வறுமைக்கு எதிராக போராடும் ஆக்ஸ்ஃபம் அமைப்பு திங்கட்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது.
இது அனைத்துலக மனிதாபிமான சட்டத்திற்கு எதிரானது என்று அது கூறியுள்ளது.
போர் நடக்கும் சூழலில் பாலஸ்தீனத்திற்கு செல்லும் உதவிகளைத் தடுக்க இஸ்ரேல் முறைகேடாக செயல்படுவதாகவும் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
காஸாவில் நெருக்கடி நிலையை சமாளிக்க கடந்த ஜனவரி மாதம் அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை இஸ்ரேல் மீறுவதாக அரசாங்கம் சாராத ஆக்ஸ்ஃபம் அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது.
மேலும், போர் சூழலில் இஸ்ரேல் காஸா மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் அது கூறியது.
அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பு இஸ்ரேல் தலைவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கும்; ஆனால் அதற்குள் காஸாவில் நிலைமை மோசமாக மாறிவிட்டதென அமைப்பு கூறியது.
இஸ்ரேல் அனைத்துலக உதவிகளை சரியாகக் கையாளவில்லை, மேலும் அது உதவிகளை எப்படி தொடர்ந்து தவிர்ப்பது என்பதையும் செய்துவருகிறது என்றும் அது கூறியது.
தேவையற்ற சோதனைகள் காரணமாக காஸாவிற்குள் செல்லும் உதவி வண்டிகள் கிட்டத்தட்ட 20 நாள்களாவது வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது என்றது ஆக்ஸ்ஃபேம் அமைப்பு.
“மின்சக்தி கருவிகள், கை விளக்குகள் போன்றவற்றை ஹமாஸ் போராளிகள் பயன்படுத்தக்கூடும் என்பதால் அத்தகைய பொருள்களை இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. மேலும் பல பொருள்களை இஸ்ரேல் காஸாவிற்குள் செல்ல தடை விதித்துள்ளது.
“தடை செய்யப்பட்ட பொருள்களின் எண்ணிக்கையும் அதிகம். அதில் அடிக்கடி மாற்றங்களைச் செய்கிறது இஸ்ரேல். தண்ணீர் பைகள், தண்ணீர் சோதனை கருவிகளையும் இஸ்ரேல் தடை செய்துள்ளது. அதற்கான சரியான காரணத்தையும் அது கூறவில்லை,” என்று ஆக்ஸ்ஃபேம் அமைப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
பிப்ரவரி மாதம் 2,874 வண்டிகள் மட்டுமே காஸாவிற்குள் நுழைந்துள்ளன. இது போருக்குமுன் ஒரு நாளுக்கு காஸாவிற்கு செல்லும் வண்டிகளின் எண்ணிக்கையில் 20 விழுக்காடு மட்டுமே என்று அமைப்பு கூறியது.
சரியான உதவிகள் கிடைக்காவிட்டால் காஸாவில் உள்ள 1.7 மில்லியன் மக்கள் பஞ்சத்தில் தவிக்கக்கூடும் என்றும் அது கவலை தெரிவித்தது.
1.7 மில்லியன் மக்கள் என்பது காஸா மக்கள்தொகையில் 75 விழுக்காடு என்று கூறப்படுகிறது.