செப்பாங்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1ல், ஏப்ரல் 14ஆம் தேதியன்று துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது.
இதில் மெய்க்காப்பாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதை ஒரு கொலை முயற்சியாக மலேசியக் காவல்துறை வகைப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 14 அதிகாலை 1.30 மணி அளவில் கோலாலம்பூருக்குள் வரும் பயணிகளுக்கான வருகைப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் உசேன் உமர் கான் தெரிவித்தார்.
ஆடவர் ஒருவர் துப்பாக்கியால் இருமுறை சுட்டார். ஒருவருக்கு மெய்க்காப்பாளராகப் பணியாற்றும் ஆடவர் மீது குண்டு ஒன்று துளைத்தது. சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். தமது மனைவிக்கு அந்த ஆடவர் குறிவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மெய்க்காப்பாளர் படுகாயம் அடைந்துள்ளார்.
“இந்தச் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதல்ல. இது தனிப்பட்ட விவகாரம் காரணமாக நிகழ்ந்துள்ளது. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் பாதுகாப்பாக உள்ளது. நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது,” என்று திரு உசேன் உமர் கூறினார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.