ஜெருசலம்: இஸ்ரேல் மீது ஈரான் முதல்முறையாக நேரடித் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 300க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகளை ஈரான், இஸ்ரேல் வான்வெளிக்குள் அனுப்பியதாகவும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை மணி ஒலித்தது.
பல இடங்களில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கூறினர்.
ஈரான் அனுப்பிய ஆளில்லா வானூர்திகளைத் தகர்க்க இஸ்ரேல் தீவிரமாகச் செயல்பட்டதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது.
ஈரான் நடத்திய தாக்குதலில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் படுகாயம் அடைந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.
ஈரானின் ஆளில்லா வானூர்திகளில் பலவற்றைச் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
அதே போன்று ஜோர்தானிய விமானப் படையும் இஸ்ரேலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஈரானிய ஆளில்லா வானூர்திகளைத் தகர்த்தது.
ஈரான் நடத்திய இத்தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்திகள் வெளியிட்டன.
காஸா போர் தொடர்பாக மத்திய கிழக்கில் ஏற்கனவே தலைவிரித்தாடும் வன்முறை, பதற்றநிலை இதன் காரணமாக மேலும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது.