பெய்ஜிங்: சீனாவின் குவாங்டாங் மாநிலத்தில் தொடர்ந்து பெய்யும் அடைமழை காரணமாக அங்குள்ள முக்கிய ஆறுகள், நீர்வழிகள், நீர்த்தேக்கங்களில் நீர் நிறைந்து பேராபத்தை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கு நிகழக்கூடும் என்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
127 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதுகாக்கும் அவசரகால நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இறங்கியுள்ளது.
மோசமான நிலைமை என்று வர்ணித்த உள்ளூர் வானிலை அதிகாரிகள், ஜிஜியாங், பெய்ஜியாங் நதிப் படுகைகளில் உள்ள ஆறுகள், கிளை நதிகளின் பகுதிகள் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே உச்ச நீர் மட்டத்தை எட்டும் என்று தெரிவித்ததாக ஞாயிற்றுக்கிழமை சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சிசிடிவி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
பெய்ஜியாங் படுகையில் பெரும் வெள்ளம் எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கைப் பேரழிவுகளைத் தடுப்பதற்காக அவசரகால நடவடிக்கைகளைத் தொடங்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, தண்ணீர், உறைவிட வசதிகளை உறுதிசெய்யவும் பேரிடர் நிவாரண நிதி, பொருள்களை உடனடியாக வழங்கவேண்டும் என்றும் உள்ளாட்சிகள், நகராட்சிகளுக்கு குவாங்டாங் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
கடந்த சில வாரங்களாக சீனாவின் பல பகுதிகளை பாதித்துள்ள பருவநிலை மாற்றங்கள் காரணமாக சனிக்கிழமை மாலை முதல் மாகாணத்தை கடுமையான மழையும் பலத்த காற்றும் தாக்கி வருகின்றன.
சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 12 மணி நேரம் கனமழை பெய்தது. மாகாணத்தின் மத்திய, வடக்குப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிறைந்து வருகின்றன.