தைப்பே: தைவானின் கிழக்கு மாவட்டமான ஹுவாலியன் பகுதியில் ஏப்ரல் 27ஆம் தேதி சனிக்கிழமை 6.1 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்தது. அந்த நிலநடுக்கங்களால் உண்டான சேதங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
சனிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து தலைநகர் தைப்பேயில் கட்டடங்கள் ஆட்டம் கண்டன.
முதல் நிலநடுக்கம் ஹுவாலியன் கடற்பகுதியில் 24.9 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாகவும் இரண்டாவது நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் அதே பகுதியில் 18.9 கி. மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாகவும் அந்த வானிலை நிலையம் தெரிவித்தது.
ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தைவானின் ஹுவாலியன் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 17 பேர் கொல்லப்பட்டனர். அதிலிருந்து தைவானில் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டன.
இந்நிலையில், இப்போது ஒரு மணி நேரத்திற்குள் நிகழ்ந்துள்ள இரண்டு நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
‘டெக்டோனிக் பிளேட்ஸ்’ எனப்படும் பூமியின் மேல் தட்டுகள் இரண்டும் சேரும் இடத்தில் தைவான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
கடந்த 2016ல் தைவானின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல் 1999ஆம் ஆண்டில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அங்கு 2,000க்கு அதிகமானோர் கொல்லப்பட்டனர்.