நோம் பென்: கம்போடியாவில் ராணுவத் தளம் ஒன்றில் நிகழ்ந்த வெடிப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் ஹுன் மானெட் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 27) தெரிவித்தார்.
இச்சம்பவம் தலைநகர் நோம் பென்னுக்கு மேற்கே உள்ள கம்போங் ஸ்பியு மாநிலத்தில் சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு நிகழ்ந்தது என்று திரு ஹுன் மானெட் கூறினார். ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த லாரி ஒன்று வெடித்ததாக கம்போடிய ராணுவம் தெரிவித்தது.
“ஆயுதங்கள் வெடித்ததாக வந்த செய்தி எனக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது,” என்று திரு ஹுன் மானெட் ஃபேஸ்புக்கில் சொன்னார். மாண்டோரின் குடும்பத்தாருக்கு அவர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
வெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
சம்பவ இடத்தில் அழிந்துபோன ஒரு தளக் கட்டடம் ஒன்றைப் புகை சூழ்ந்திருந்தது சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களில் தெரிந்தது. உடைந்துபோன சன்னல்கள் உள்ள படங்களையும் அருகே இருக்கும் கிராமவாசிகள் இணையத்தில் பகிர்ந்துகொண்டனர்.
பொதுமக்கள் எனக் கருதப்படுவோர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும் சில படங்கள் காண்பித்தன. காயமடைந்தோரில் ஒரு குழந்தையும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
கம்போடியாவில் ஆயுதங்கள் தொடர்பான விபத்துகள் நடப்பது அரிதன்று. பல ஆண்டு காலமாக உள்நாட்டுப் போரை எதிர்கொண்ட அந்நாட்டில் பல ஆயுதங்கள் இருக்கின்றன. பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக இல்லாததால் அங்கு மோசமான ஆயுதம் சார்ந்த விபத்துகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் வெடித்ததாகக் கம்போடிய ராணுவம் குறிப்பிட்டது. அந்த வெடிப்பு, ஆயுதங்களால் நிரப்பப்பட்டிருந்த லாரி ஒன்றை முழுமையாக அழித்ததாகவும் ராணுவம் கூறியது.
ஓர் அலுவலகக் கட்டடமும் அருகே இருந்த ராணுவ வீரர்களுக்கான தங்குமிடமும் அழிந்துபோயின. அருகே இருக்கும் 25 வீடுகளும் பெரும் சேதத்துக்கு உள்ளாயின.
மாண்ட ராணுவ வீரர்களுக்கு உடனடியாக இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்யுமாறு திரு ஹுன் மானெட் தமது தற்காப்பு அமைச்சருக்கும் கம்போடிய ஆயுதப் படையின் தலைமை தளபதிக்கும் உத்தரவிட்டார்.
மாண்டோரின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் சுமார் 20,000 டாலர் (S$27,000) வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். காயமடைந்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 5,000 டாலர் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.