கியவ்: ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதியை விட்டு வெளியேறி உக்ரேன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை அடைய 98 வயது உக்ரேனிய மூதாட்டி ஒருவர் 10 கிலோமீட்டர் தொலைவை நடந்தே கடந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சமூக ஊடகத்தில் உக்ரேனியக் காவல்துறை திங்கட்கிழமை (ஏப்ரல் 29) வெளியிட்ட காணொளியில், ரஷ்யத் தாக்குதலுக்கு இடையே தன் ஊன்றுகோலின் உதவியோடு உணவு, தண்ணீர் இன்றி இப்பயணத்தை மேற்கொண்டதாகவும் பலமுறை நிலை தடுமாறிக் கீழே விழுந்தாலும் உக்ரேன் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியை அடையவேண்டும் என்ற எண்ணம் தன்னை மனம் தளராது இருக்கச் செய்ததாகவும் அந்த மூதாட்டி தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே போர் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது.
போர் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சட்டவிரோதமாக உக்ரேனிய எல்லைகளைக் கடக்க முயன்ற கிட்டத்தட்ட 30 உக்ரேனிய ஆடவர்கள் உயிரிழந்ததாக உக்ரேனின் எல்லைப் பாதுகாப்பு சேவையின் பேச்சாளர் ‘உக்ரின்ஃபார்ம்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மேலும், “சிலர் நதிகளையும் மலைகளையும் கடக்க முயன்றபோது உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக, முழு அளவிலான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்ற கிட்டத்தட்ட 30 பேர் இறந்துள்ளனர்,” என்று அவர் தெரிவித்ததாக ‘உக்ரின்ஃபார்ம்’ திங்கட்கிழமை கூறியது.