சிட்னி: குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவும் விதமாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கிட்டத்தட்ட 817 மில்லியன் வெள்ளி செலவிடவுள்ளது.
மேலும், ஆபாசக் காணொளிகள், இணையத் துன்புறுத்தல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களைக் காக்கும் விதமாகவும் ஆஸ்திரேலியா புதிய நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவிட்டதாக ஏப்ரல் 27ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் பேரணி நடத்தினர்.
ஆஸ்திரேலிய அரசின் தரவுகளின் படி இவ்வாண்டில் நான்கு நாள்களுக்கு ஒரு பெண் கொல்லப்படுகிறார். கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 34 பெண்கள் அவர்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவை அதிரவைத்த கடைத்தொகுதி கத்திக்குத்து சம்பவத்தில் ஐந்து பெண்கள் மாண்டனர். இதுபோன்ற பிரச்சினைகள் கான்பராவுக்கு நெருக்கடியைத் தரத் தொடங்கியது.
இதனால், பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், மாநில மற்றும் கூட்டாட்சி தலைவர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதன் பிறகு மே1ஆம் தேதி உதவித் தொகை குறித்து அவர் அறிவித்தார்.
உதவித் தொகை 2025ஆம் ஆண்டு நடுப்பகுதி முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தகுதிபெறும் நபர் 1,500 ஆஸ்திரேலிய டாலர் வரையிலான உதவித்தொகையை பெறுவார். மேலும் 12 வாரங்கள் வரையிலான பொருள்களுக்கும் சேவைகளுக்குமான 3,500 டாலர் மதிப்பிலான உதவிகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
துன்புறுத்தல் சம்பவங்கள் அரசாங்கத்திற்கு மட்டும் பிரச்சினையாக இல்லை, சமூகம், பொது வாழ்க்கை, ஊடகங்கள் என பலதரப்புகளுக்கு இது பிரச்சினையாக உள்ளது என்றார் அல்பனீஸ்.
மேலும் போலியான முறையில் தயாரிக்கப்படும் ‘டீப்ஃபேக்’ படங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஆஸ்திரேலியா விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.