ஜெருசலேம்: அமெரிக்காவில் இருக்கும் நியூ ஜெர்சி நகரத்தின் நெவார்க் பகுதியிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்திற்குச் செல்லும் விமானச் சேவையை யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மே 2ஆம் தேதி வரை ரத்துச் செய்திருந்தது.
மத்திய கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் போர் பதற்றத்தால், விமானச் சேவை ரத்து மே 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.
“நாங்கள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள், விமானச் சிப்பந்திகள் ஆகியோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விமானச் சேவைகள் குறித்து முடிவெடுப்போம்,” என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தித் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான்மீது இஸ்ரேல் நடத்திய வெளிப்படையான தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களால் இஸ்ரேலுக்கான தனது விமானங்களை யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மே 2ஆம் வரை ரத்துச் செய்வதாக ஏப்ரல் 19ஆம் தேதி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.