மணிலா: சுட்டெரிக்கும் வெப்பத்தில் நாடே புழுங்கிவரும் வேளையில், பிலிப்பீன்ஸ் நாட்டின் சில நகரங்களில் மே 2, 3 ஆகிய தேதிகளில் பொதுப் பள்ளிகள் தொடர்ந்து நேரடி வகுப்புகளை நிறுத்திவைத்திருக்கும்.
‘கடும் வெப்பக் குறியீட்டு முன்னுரைப்பு’ காரணமாக மணிலாவின் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று மே 1ஆம் தேதி தெரிவித்த மேயர் ஹனி லகுனா, மாற்றுக் கற்றல் முறைகளுக்கு மாறப் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
‘ஜீப்னி’ போக்குவரத்து வேலைநிறுத்தம், வெப்ப அலை ஆகிய இரண்டாலும் ஏப்ரல் 29, 30 தேதிகளில் நாடு முழுவதும் உள்ள பொதுப் பள்ளிகளை பிலிப்பீன்ஸ் மூடின. மே 1ஆம் தேதி பொது விடுமுறை.
ஈரப்பதத்தைக் கருத்தில் கொண்டு ஒருவர் உணரும் வெப்பநிலையைக் குறிப்பது, வெப்பக் குறியீடு. இது மே 2ஆம் தேதி பிலிப்பீன்சில் மிக அதிகமாக 47 டிகிரி செல்சியசை எட்டும் என்று நாட்டின் வானிலை முன்னுரைப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வெப்பக் குறியீடு ஏப்ரல் 28ஆம் தேதி 53 டிகிரி செல்சியசைத் தொட்டதால் வெப்பத் தாக்கத்தால் ஏற்படும் சம்பவங்கள் விரைவில் பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.