தைப்பே: தைவானின் ஹுவாலின், தைடூங் ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுலா வரும் சுற்றுப்பயணங்களுக்குத் தங்குமிடம், போக்குவரத்து ஆகியவற்றில் சலுகைகள் வழங்க தைவான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக $222 மில்லியன் ஒதுக்கியுள்ளதாகத் தைவானின் போக்குவரத்து, தகவல் தொடர்பு அமைச்சு வியாழக்கிழமை (மே 2ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சுற்றுலாத் துறைக்குப் புத்துயிர் அளிக்கக் குறைந்தபட்சம் $54 மில்லியன் இந்த நிதியிலிருந்து செலவிடப்படும் என்றும் அந்நாட்டு அமைச்சு கூறியது.
சுற்றுலாத் துறை மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹுவாலினுக்குச் சுற்றுலா வரும் சுற்றுப்பயணிகளுக்குத் தங்குமிடங்களில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அப்பகுதிக்கு வருபவர்களுக்கு அறை ஒன்றுக்கு $41.83 வரையும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறுக்கிழமை வரை வருபவர்களுக்கு அறை ஒன்றுக்கு $20.92 வரையும் தங்கிட வாடகையில் சலுகைகள் பெறலாம் என அந்நாட்டு அமைச்சு தெரிவித்தது.
தைடூங்கிற்கு வரும் சுற்றுப்பயணிகளுக்குத் தங்குமிடங்களில் அறை ஒன்றுக்கு $41.83 வரை சலுகைகள் கிடைக்கும் என அது மேலும் கூறியது.
இந்தச் சலுகைகள் ஜூலை 1ஆம் தேதி முதல் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.