தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதில் எந்த அம்சத்தையும் நாங்கள் ஒதுக்கி வைக்கவில்லை.
இப்படிக் கூறிய தென்கொரிய அதிபர் ஆலோசகர் ஆசியானுடனான உறவுகளை உயிர்மூச்சு என்றும் அது ஒரு சொகுசான அம்சம் அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
“ஆசியான் முழுவதும் எங்களுக்கு முக்கியமானதுதான்,” என்று அரசு சார்ந்த ஆய்வுக் குழுவான ‘கொரிய நேஷனல் டிப்ளோமேட்டிக் அகாடமி’ என்ற கொரிய தேசிய அரசதந்திர கல்வி நிலையத்தின் வேந்தரான திரு திரு பார்க் சியோல் ஹீ கூறியுள்ளார். அவரின் இந்தக் கல்வி நிலையம் தென்கொரிய அரசதந்திரிகளுக்கு பயிற்சி அளிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
“இங்கு நம்மால் செய்ய முடியாதது எதுவுமில்லை. அத்துடன், இந்த வட்டாரத்தில் எங்களுக்கு பெருமளவில் நன்மை உள்ளது.
“வரலாற்று அடிப்படையில் ஜப்பானைப் போல் எங்களுக்கு எந்தவிதமான கெட்ட நினைவுகளும் இல்லை. தென்கொரியா எந்த ஆசியான் நாட்டுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்கவில்லை. ஆசியானை பொருளியல் ரீதியாகவோ, கலாசார ரீதியிலோ எங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்திக்கொள்ளும் ரகசியத் திட்டம் எதையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை. எங்களுக்குக் கிடைக்கும் பலன்களை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம். இதில் நல்ல அம்சம் என்னவெனில் தென்கொரியாவுக்கும் ஆசியானுக்கும் இடையில் நாங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் உறுதியாக ஒத்துழைக்கும் அடித்தளத்தை அமைத்துள்ளோம்,” என்று அவர் விளக்கினார்.
டாக்டர் பார்க் மே 3ஆம் தேதி அன்று, சிங்கப்பூரில் ஆய்வுக் குழுக்கள் , மூத்த வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் ஆகியோரை சந்திப்பது தொடர்பாக மேற்கொண்ட மூன்று நாள் வருகையின் இறுதி நாளன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசினார்.