ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் 63 வைஃபை சேவை இடங்களை அமைக்க கிட்டத்தட்ட 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் அஸ்னான் தமிம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 200,000 பேர் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜோகூர் கல்வி, தகவல் குழுத் தலைவரான திரு அஸ்னான் கூறினார்.
வைஃபை சேவையின் வேகம் சராசரியாக ஒரு வினாடிக்கு 1லிருந்து 2 கிகாபைட்டாக இருக்கும் என்றார் அவர்.
“கடந்த ஆண்டு ஜோகூர் மாநிலத்தின் வரவுசெலவுத் திட்டத்தை மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி தாக்கல் செய்தபோது மின்னிலக்கமயமாதல் தொடர்பான முயற்சிகள் குறித்து பேசினார். வைஃபை சேவை இடங்கள் இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இதற்காக 1.9 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்றார் திரு அஸ்னான்.