பெட்டாலிங் ஜெயா: மலேசியக் காற்பந்துக் குழு ஆட்டக்காரர் ஃபைசல் ஹலிம்மீது அமிலம் வீசப்பட்டதைக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கோத்தா தாமான்சாராவில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 5) இச்சம்பவம் அரங்கேற்றப்பட்டது.
காற்பந்து வீரர் தாக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை திரங்கானு காற்பந்துக் குழுவின் அக்யர் ரஷீத், பயிற்சியை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிய நிலையில், காரிலிருந்து இறங்கியபோது கொள்ளையர் இருவரால் தாக்கப்பட்டார்.
இதனிடையே, தனியார் மருத்துவமனை ஒன்றில் ஃபைசல் சிகிச்சை பெற்று வருவதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமார் கான் தெரிவித்தார்.
சம்பவத்தை நேரில் கண்டவர்கள் காவல்துறையைத் தொடர்புகொள்ளும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய தேசிய அணி வீரரும் சிலாங்கூர் காற்பந்துக் குழுவிற்காக விளையாடி வருபவருமான ஃபைசலைப் பல ஆடவர்கள் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான காரணம் தெரியவில்லை.
காற்பந்து வீரர்கள் மீதான தாக்குதலுக்கு மலேசிய இளையர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோவும் மலேசியக் காற்பந்துச் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஃபைசல் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மோட்டார்சைக்கிள் பதிவெண்ணை வைத்து, 20 வயதுகளில் இருக்கும் அந்த ஆடவரைப் பிடித்ததாகக் காவல்துறை தலைமை ஆய்வாளர் ரஸாருதீன் ஹுசைன் திங்கட்கிழமையன்று (மே 6) தெரிவித்தார்.
அந்த ஆடவரை இரண்டு நாள் விசாரணைக் காவலில் வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், காற்பந்து வீரர்கள் இருவர்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும் காற்பந்துச் சூதாட்டத் தரகர்களுக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுவதைத் திரு ரஸாருதீன் மறுத்தார்.
“பொதுமக்கள் ஊகமாக எதனையும் தெரிவிக்க வேண்டாம். அது விசாரணையைப் பாதிக்கக்கூடும். முழுமையாக விசாரிக்க எங்களுக்குக் கால அவகாசம் அளியுங்கள்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.