மாஸ்கோ: ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இரண்டு பேருந்துகள் மீது உக்ரேனிய ஆளில்லா வானூர்தி நடத்திய தாக்குலில் அறுவர் கொல்லப்பட்டனர், 35 பேர் காயமடைந்தனர்.
பெரெசோவ்கா கிராமத்திற்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் திங்கட்கிழமை தெரிவித்தார். கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்ட பேருந்தின் படத்தை அவர் வெளியிட்டார்.
ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் இரண்டு குழந்தைகள் காயமடைந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.
பொதுமக்களைக் குறிவைப்பதை மறுக்கும் கியவ், பொதுமக்கள் மீதான உக்ரேனிய தாக்குதல்களை மேற்கத்திய நாடுகள் புறக்கணிப்பதாகக் கூறும் ரஷ்யாவைத் தாக்கும் உரிமை தனக்கு இருப்பதாகவும் கூறியது.
இதற்கிடையே, அமெரிக்காவுடனும் அதன் நட்பு நாடுகளுடனும் வெளிப்படையான மோதலில் இருப்பதால் மேற்கத்திய நாடுகளின் தாக்குதலைத் தடுக்க ரஷ்யா தனது ஒட்டுமொத்த ஏவுகணை ஆயுதங்களை அதிகரிக்க வேண்டும் என்று ரஷ்யத் தூதர் ஒருவர் திங்கட்கிழமை கூறியுள்ளார்.
1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு, உக்ரேன் மீதான படையெடுப்பு ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மிக மோசமான முறிவை ஏற்படுத்தியுள்ளதாக ரஷ்ய, அமெரிக்கத் தூதர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யா ஆயுத உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளது. நேட்டோவின் 32 உறுப்பு நாடுகளின் மொத்த தயாரிப்பை விட இந்த ஆண்டு அதிக பீரங்கிகளை அது உற்பத்தி செய்யும் என்று அமெரிக்கா கணித்துள்ளது.
2024ல் ரஷ்யா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 7.1 விழுக்காட்டை அல்லது மொத்த அரசாங்க செலவில் மூன்றில் ஒரு பங்கை ராணுவத்திற்காக செலவிட உள்ளது என்று ஸ்டாக்ஹோம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம் கூறியுள்ளது.