கோலாலம்பூர்: மலேசியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவப்பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
மருத்துவக் கல்வியை முடித்தவர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு முதல் குறைந்து வருகிறது. தற்போது அது 50 விழுக்காடுவரை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்நாட்டில் போதுமான அளவில் மருத்துவர்கள் இல்லாமல் பொதுச்சுகாதாரக் கட்டமைப்பில் பிரச்சினைகள் எழக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக, மருத்துவப் பட்டக்கல்வியை முடித்தவர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மலேசியாவின் மனிதவள அமைச்சின் தரவுகள்படி 2019ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த மருத்துவர்களின் எண்ணிக்கை 6,134ஆக இருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டு அது 3,271ஆக குறைந்தது.
இந்த பிரச்சினைக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இது பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும், இதனால் மலேசிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று கவனிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என தமது அமைப்பு 2021ல் கணித்திருந்ததாக ‘ஹார்டல் டாக்டர் கான்டிராக்’ அமைப்பின் பேச்சாளர் டாக்டர் முகம்மது யாசின் கூறினார்.
“இந்தப் பிரச்சினை உலக அளவில் உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் தற்போது அறிவியல் சாராத துறைகளில் நாட்டம் செலுத்துகின்றனர். இதனால் மருத்துவப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது,” என்றார் டாக்டர் யாசின்.
“மலேசியாவில் இந்த நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. மருத்துவர்களுக்கான ஒப்பந்தங்களில் உள்ள சில பிரச்சினைகள் காரணமாக 2016ஆம் ஆண்டு முதலே மருத்துவர்கள் எண்ணிக்கை சரிவைச் சந்திக்கத் தொடங்கியது,” என்று அவர் குறிப்பிட்டார்.
மருத்துவர்களுக்கான ஒப்பந்தப்படி,மலேசிய மருத்துவர்களுக்கு அரசாங்க வேலை நிரந்தரமான வேலையாக வழங்கப்படாது. இதனால் அவர்களின் சம்பளம் குறையும். மேலும் மற்ற அரசாங்க ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் மருத்துவர்களுக்கு கிடைக்காது.
“மருத்துவர்கள் தட்டுப்பாட்டால் தற்போது வேலையில் இருக்கும் மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். இது சில நேரம் முக்கியமான அறுவை சிகிச்சையின்போது தவறுகளை ஏற்படுத்தக்கூடும், மேலும் வேலைப்பளு கூடினால் மருத்துவர்களின் மனநலமும் உடல்நலமும் பாதிக்கப்படக்கூடும்,” என்று டாக்டர் யாசின் கவலை தெரிவித்தார்.