பேங்காக்: தாய்லாந்தில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் இதுவரை 61 பேர் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்தனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (மே 10) தெரிவித்தது.
தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாகக் கடுமையான வெப்ப அலைகள் வீசிவருகிறது. இந்நிலையில், வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் நிலவிவரும் கடுமையான வெப்பநிலை காரணமாகத் தினசரி இதுகுறித்த எச்சரிக்கைகளை வெளியிட அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து அதிகமானோர் வெப்பத் தாக்கத்தால் உயிரிழந்ததாகவும் கடந்த ஆண்டு வெப்பத்தாக்கத்தால் அந்நாட்டில் 37பேர் இறந்ததாகவும் அந்நாட்டுச் சுகாதர அமைச்சு கூறியது.
மேலும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அது தெரிவித்தது.
மருத்துவச் சிக்கல்கள் உள்ளவர்கள் பகல் நேரங்களில் வெளியில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு தாய்லாந்தின் நோய்க் கட்டுப்பாட்டுத் துறையின் துணைத் தலைவர் திரு அபிசார்ட் வச்சிராபன் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.