வாஷிங்டன்: ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பாய்ச்சிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றையும், ஆளில்லா வானூர்தி ஒன்றையும் டிசம்பர் 28ஆம் தேதி அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று சுட்டுவீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் கூறியது.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலின் முக்கியக் கப்பல் தடத்தில் உள்ள கப்பல்களைத் தொடர்ந்து குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தாக்குதல்கள் காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைந்ததாக அவர்கள் கூறுகின்றனர். காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளித்துவக் குழுவுக்கும் இடையே போர் நிலவுகிறது.
“செங்கடலின் தென் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பாய்ச்சிய ஆளில்லா வானூர்தி ஒன்றையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றையும் ‘யுஎஸ்எஸ் மேசன்’ (டிஜிஜி 87) சுட்டுவீழ்த்தியது,” என்று அமெரிக்க மத்திய தளபத்தியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
“அந்தப் பகுதியில் இருந்த 18 கப்பல்களும் சேதமடையவில்லை. யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை,” என்று அது கூறியது.
அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் அனைத்துலகக் கப்பல் போக்குவரத்தின்மீது நடத்தியிருக்கும் 22வது தாக்குதல் அது என்று அமெரிக்க மத்திய தளபத்தியம் தெரிவித்தது.
அந்தத் தாக்குதல்களால், 12 விழுக்காடு வரையிலான உலக வர்த்தகத்தை ஏற்றிச்செல்லும் பாதை பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக செங்கடல் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்க, இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்கா பன்னாட்டு கடற்படை பணிக்குழு ஒன்றை அமைத்தது.