வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட வெண்ணிறத் தூள், ‘கொக்கைன்’ போதைப்பொருள் என வாஷிங்டனின் தீயணைப்பு, அவசர சேவை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தத் தூள் மேற்குப் புறத்தில் உள்ள கட்டடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், அதன் தொடர்பில் மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அதிபர் ஜோ பைடன் வசித்துவரும் நிர்வாக மாளிகையுடன் அந்தக் கட்டடம் இணைந்திருக்கிறது. ஓவல் அலுவலகம், அமைச்சரவை அறை, செய்தியாளர் பகுதி, அதிபரின் ஊழியர்களுக்கான அலுவலகங்கள், வேலையிடம் ஆகியவை அந்தக் கட்டடத்தில் அமைந்துள்ளன.
நூற்றுக்கணக்கானோர் அந்தக் கட்டடத்தில் பணிபுரிகின்றனர் அல்லது அடிக்கடி அதன் வழியாகச் செல்கின்றனர்.
அடையாளம் தெரியாத பொருள் ஒன்று கட்டடத்தில் உள்ள வேலையிடத்தில் காணப்பட்டதாக அமெரிக்க ரகசிய சேவை தெரிவித்தது. அதன் காரணமாக, வெள்ளை மாளிகையின் வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
அந்தப் பொருளை ஆராய வாஷிங்டன் தீயணைப்புத் துறைக்கு உடனடியாக அழைப்பு விடுக்கப்பட்டது. அது அபாயமற்ற பொருள் என்று விரைவில் உறுதிப்படுத்தப்பட்டதாக ரகசிய சேவை பேச்சாளர் கூறினார். வெள்ளை மாளிகையில் அந்தப் பொருள் எப்படிக் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.
ஞாயிற்றுக்கிழமையன்று திரு பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.