பிரசல்ஸ்: பெரிய அளவிலான கிறிஸ்துமஸ் மரம் ஒன்று விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் இருவர் காயமுற்றனர்.
இச்சம்பவம் பெல்ஜியம் நாட்டின் ஓடனாட் நகரில் வியாழக்கிழமை (டிசம்பர் 21) நிகழ்ந்தது.
அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரச் சதுக்கத்தில் கிறிஸ்துமஸ் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. அதையொட்டி, 20 மீட்டர் உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் நிறுவப்பட்டிருந்தது
இந்நிலையில், உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் பெருமழை பெய்ததாலும் பலத்த காற்று வீசியதாலும் அம்மரம் மெதுவாகச் சாய்ந்து, கிறிஸ்துமஸ் சந்தைமீது விழுந்தது.
அதில் பெண்கள் மூவர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 63 வயதுப் பெண் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அந்நகர மேயர் மார்னிக் டி மியூல்மீஸ்டர் கூறினார்.
மற்ற இரு பெண்களுக்கும் இலேசான காயமேற்பட்டது.
இச்சம்பவத்தையடுத்து, கிறிஸ்துமஸ் சந்தை மூடப்பட்டது. இனி அது திறக்கப்படாது என்று மேயர் தெரிவித்தார்.
அத்துடன், அந்நகரிலுள்ள அரசாங்கக் கட்டடங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டதாக ‘பிரசல்ஸ் டைம்ஸ்’ செய்தி குறிப்பிட்டது.