கடந்த ஆண்டின் லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மூவருள் ஒருவர் 28 வயது மருத்துவர் மா. பிரெமிக்கா. இந்த உபகாரச் சம்பளத்தின் மூலம் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பொதுச் சுகாதாரத் துறையில் ஓராண்டுகால முதுநிலைப் பட்டக்கல்வியை விருதுகள், சிறப்புகளுடன் நிறைவுசெய்து நாட்டுக்கும் சமூகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.
“உலகளவில் வெவ்வேறு சமூகப் பொருளியல் நிலைகளில் உள்ள நாடுகளின் பொதுச் சுகாதாரம் குறித்த பரந்த கண்ணோட்டத்தையும் புரிதலையும் இந்த ஓராண்டு அளித்தது. இதை அடித்தளமாகக் கொண்டு சிங்கப்பூரின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளேன்,” என்று உற்சாகத்துடன் கூறினார் பிரெமிக்கா.
இந்த ஓராண்டில் கல்வியுடன் பிற தொண்டூழிய முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார் இவர். பால்டிமோர் நகரத்தின் குறைந்த வருமான குடும்பங்கள் மலிவு விலையில் அல்லது இலவசமாக உணவையும் ஆடைகளையும் பெற உதவும் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
‘ஃபிரான்சிஸ்கன் சென்டர் ஆஃப் பால்டிமோர்’ (Franciscan Centre of Baltimore) எனும் தொண்டூழிய அமைப்புடன் இணைந்து மேற்கொண்ட இந்த முயற்சியின் மூலம் பால்டிமோர் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பயனடையவுள்ளனர்.
இந்த முயற்சிக்காக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதார நடைமுறைகளுக்கான உன்னத விருதினையும் (Excellence in Public Health Practice Award) பெற்றுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் ‘அன்னா பேட்ஜர்’ (Anna Baetjer Society) எனும் சமூகக் குழுவின் தலைவராக இருந்த பிரெமிக்கா, தன் கல்விக் காலத்தில் குழுவினருடன் இணைந்து பொதுச் சுகாதாரத்தை மையப்படுத்திய பயிலரங்குகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட 11 நிகழ்வுகளை நடத்தியுள்ளார். இவர் தலைமையின் கீழ் இக்குழு சோர்ஸ் சமூக சேவை விருதை (SOURCE Community Service Award) வென்றது.
உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டுள்ள பிரெமிக்கா, ‘யோகாவும் தியானமும்’ எனும் குழுவையும் தன் தோழியுடன் இணைந்து இப்பல்கலைக்கழகத்தில் தொடங்கியுள்ளார்.
“ஒவ்வொரு நாளும் 15 முதல் 30 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபடுகிறேன். அதனாலயே தேர்வுகளைக்கூட எவ்வித மனஅழுத்தமும் இல்லாமல் எதிர்கொண்டேன். பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் மனஅழுத்தத்தினால் அவதியுறுவதைக் கண்ட பின்னரே அவர்களுக்குப் பயனளிக்கும் நோக்கில் இக்குழுவை உருவாக்கினோம்,” என்றார் பிரெமிக்கா.
பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தோனீசியாவின் கிழக்கு பகுதியிலுள்ள கெய் பெசார் தீவில் மேற்கொண்ட கள ஆய்விற்காக ‘எம்பிஎச் கள அனுபவ விருதை’யும் இவர் பெற்றுள்ளார். மீனவர்கள் வாழும் அக்கிராமத்தில் மூன்று வாரங்கள் தங்கி, அங்குள்ள பிள்ளைகளும் மக்களும் ஊட்டச்சத்து குறைந்து காணப்படுவதற்கான காரணிகளையும் நிவாரணங்களையும் கண்டறிந்தார்.
சிங்கப்பூரை அடிப்டையாகக்கொண்ட தரவுத்தொகுப்பைக் கொண்டு இவர் இப்படிப்பின் தொடர்பாகச் செய்திருந்த முக்கிய ஒப்படைப்பும் ‘எம்பிஎச் கேப்ஸ்டோன் விருதை’ வென்றுள்ளது.
தொடக்கப்பள்ளிக் காலம் முதலே படிப்போடு சமூக சேவையிலும் தொண்டூழியத்திலும் அக்கறையுடன் பங்களித்து வருபவர் பிரெமிக்கா.
இந்த ஓராண்டு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கியதுடன் தொண்டூழியம், சமூக முயற்சிகள் என வேறுபல ஆக்ககர செயல்பாடுகளிலும் தன்னை மேம்படுத்திக்கொண்டுள்ளார்.
தமிழ் மொழியில் மிகுந்த பிடிப்பும் திறனும் உள்ள இந்த இளம் மருத்துவர், மருத்துவத் துறையில் தமிழ் மொழிப் பயன்பாட்டை வளப்படுத்தவும் பங்காற்றியுள்ளார்.
அவர் பெற்றுள்ள பெருமைகளுக்கு மேலும் ஒரு மகுடமாக ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் உலக சுகாதார நிறுவனத்தில் வேலைப்பயிற்சி மேற்கொள்ளவிருக்கிறார்.
“இது என்னுடைய பல ஆண்டு கனவு,” என்று நெகிழ்ந்தவாறு கூறினார் பிரெமிக்கா.