தேசிய சேவை எவ்வாறு செயல்படும் என்பதைப் பெண்கள் அனுபவித்து பார்க்கும் வகையில் அவர்கள் அடிப்படை ராணுவப் பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் வாய்ப்பை ‘அக்கோர்ட்’ எனப்படும் சமூக உறவுகளுக்கான பாதுகாப்பு ஆலோசனை மன்றம் அண்மையில் வழங்கியது.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர், இம்மன்றம் பெண்களுக்கான துவக்க முகாம் ஒன்றை அறிமுகம் செய்திருந்தது. அதில் கலந்துகொண்ட பெண்கள் ராணுவ வாழ்க்கை மற்றும் தேசிய சேவை பற்றி ஆழமாகப் புரிந்துகொண்டனர்.
பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் இம்முறை அந்த முகாம் புதிய அம்சங்களுடன் அண்மையில் நடைபெற்றது.
பெண்களுக்கு கிடைக்கும் அனுபவம் முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக துவக்க முகாம், முழுமைத் தற்காப்புத் திட்டத்திற்கு விரிவுபடுத்தப்பட்டது.
இதில் பெண்கள் ராணுவம், கடற்படை, ஆகாயப்படை, மின்னிலக்க, உளவுப் படை ஆகிய பிரிவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.
விரிவுபடுத்தப்பட்டு உள்ள புதிய திட்டமானது சிங்கப்பூரர்கள் நாட்டின் முழுமைத் தற்காப்புக்கும், தேசிய சேவைக்கும் பங்களிக்க எவ்வாறு முயற்சி செய்யலாம் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டு முழுமைத் தற்காப்பின் 40வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதத்தில் துவக்க முகாம், முழுமைத் தற்காப்புத் திட்டம் ஆகியவற்றில் கலந்துகொள்பவர்கள் சிங்கப்பூரைப் பாதிக்கக்கூடும் நடப்புகளை பற்றியும், நாட்டை எவ்வாறு அதிலிருந்து தற்காக்கலாம் என்பதைப் பற்றியும் ஆராய்வார்கள்.
சென்ற மாதம் முழுமைத் தற்காப்புத் திட்டத்தின் கடற்படைப் பிரிவில் கலந்துகொண்டவர்கள் சிங்கப்பூர் கடற்படைக்குச் சொந்தமான ‘ஆர்எஸ்எஸ் எண்டேவர்’ எனப்படும் எண்டூரன்ஸ்-கிளாஸ் விமானந்தாங்கிக் கப்பலில் ஏறி கடற்படையில் பணிபுரிபவர்களின் வேலை அனுபவங்களை அறிந்துகொண்டனர்.
இம்மாதம் அவர்கள் சிங்கப்பூர் தாக்குதல் துப்பாக்கிக்கு (SAR-21) அறிமுகம் கண்டு, இரண்டு கிலோமீட்டர் தூரம் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
மேலும், முழுமைத் தற்காப்புத் திட்டத்தின் ஆகாயப்படை பிரிவின்கீழ் அவர்கள் ஆகாயப்படையில் பணிபுரிபவர்களின் வேலை அனுபவத்தை அறிந்துகொண்டதோடு, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தையும் பார்வையிட்டனர்.
முழுமைத் தற்காப்புத் திட்டத்தின் மின்னிலக்க, உளவுத்துறைப் படைப் பிரிவின்கீழ் கலந்துகொண்டவர்கள் சிங்கப்பூரின் மின்னிலக்கக் களம் எவ்வாறு தற்காக்கப்படுகிறது என்பதை அறிந்துகொண்டனர்.
சமூக உறவுகளுக்கான பாதுகாப்பு ஆலோசனை மன்றம், சிங்கப்பூரின் முழுமைத் தற்காப்புக்கு பங்களிக்கும் வகையில் இதுபோன்ற பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்காப்பு அமைச்சு அந்த மன்றத்தை 1984 ஆம் ஆண்டில் உருவாக்கியது.
தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களை தேசிய சேவைக்குத் தயார்ப்படுத்தும் முயற்சிகளும் அவற்றில் அடங்கும்.