சங்க இலக்கியத்தின் மொழி அழகைப் பார்வையாளர்களின் ஐம்புலன்களுக்கும் விருந்தாக அளித்திட உள்ளூர் இசைக் குழு ‘பிரம்மாஸ்திரா’ நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
‘சங்காவின் உணர்வுகள்: மனித அனுபவக் கதைகள்’ நிகழ்ச்சி ஏப்ரல் 28ஆம் தேதி ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ வளாகத்தில் தமிழ்மொழி விழா நிகழ்வாக அரங்கேறியது.
இந்நிகழ்ச்சியை எழுத்தாளர்களும் கதை சொல்லிகளுமான அஸ்வனி அஸ்வத், பானு சுரேஷ், சரவணன் சண்முகம் ஆகியோர் இலக்கியம் தொடர்பான தாங்கள் உருவாக்கிய கதைகளைப் படைத்தனர்.
காதல், துணிவு, வெற்றி என மனிதன் அனுபவிக்கும் உணர்வுகளை மையமாகக் கொண்டு கதைகள் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் பல்லின இசைக் கலைஞர்களைக் கொண்ட பிரம்மாஸ்திரா இசைக்குழுவும் பங்காற்றினர்.
இசைக்குழுவைப் புல்லாங்குழல் இசைக் கலைஞரும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளருமான நிரஞ்சன் பாண்டியன் வழிநடத்தினார்.
“பிரம்மாஸ்திரா முதல்முறையாக இலக்கியத்தையும் இசையையும் ஒன்றிணைத்து படைப்பு ஒன்றைப் படைத்துள்ளது. எங்கள் இசைக் குழுவில் பல்லின வாத்திய இசைக்கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
“அவர்களில் பலருக்குத் தமிழ் தெரியாவிட்டாலும் சொற்களின் ஒலியைக் கேட்டு, புரிந்துகொண்டு அதற்குத் தக்கவாறு இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டு நிகழ்ச்சியில் இசைத்தார்கள்,” என்றார் நிரஞ்சன்.
நிகழ்ச்சியில் இடம்பெற்ற செல்லோ இசைக் கலைஞரான டான் வென் பிங், சுமார் இருபது ஆண்டுகளாக இசைத்துறையில் அனுபவம் மிக்கவர்.
“கவிதைகளின் பொருள் எங்களுக்கு விளக்கப்பட்டது. நாங்கள் இசையமைப்பதற்கு அது மிகவும் உதவியாக இருந்தது. எங்களுக்கு மொழி தெரியாவிட்டாலும் சொற்களைக் கேட்டுணர்ந்து நாங்கள் இசையமைத்தோம்,” என்றார் வென் பிங்.
இசை, உணர்வுகள் ஆகியவற்றின் கலவையாகப் படைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், கதை சொல்லிகள் கதைகளை விவரித்துக் கூறினார்கள்.
சிறுவயதிலிருந்து நாடகம், கவிதை, கதை ஆகிய கலைகளுடன் பயணித்து வந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியின் கதைசொல்லியான பானு சுரேஷ், “ஓர் உணர்வை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது நம்முடைய உடல் மொழியில் இருக்கிறது,” என்று கூறினார்.
மேலும், “அந்த உடல் அசைவிலுள்ள மொழியுடன் உணர்வும் சொற்களும் சேரும்போது அற்புதமான ஒரு தருணம் உருவாகிறது,” என்றார்.
மக்கள் பலர் இந்த அனுபவத்தைப் பெறுவதற்காக இந்நிகழ்ச்சியை மீண்டும் நடத்துவதற்கான திட்டம் இருக்கிறது என்று ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்.