தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பலருக்கும் தெரிந்திருந்த பிரக்ஞானந்தா எங்கே?

2 mins read
d6dbd8c2-7c1a-45c3-977a-c282f4334de5
இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. - படம்: ஊடகம்

பிரக்ஞானந்தா உலக அளவில் சதுரங்கத்தில் வெற்றி வாகை சூடி வருகிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. எப்படி திடீர் என்று குகேஷ் வெற்றியாளர் ஆனார் என்று பலரின் கேள்வியாக இருக்கிறது.

குகேஷ் சாம்பியன் ஆனது எப்படி என்பதையும் இப்போட்டியில் பிரக்ஞானந்தா இருந்தாரா என்பதையும் பார்ப்போம்.

முதலில் இந்தியாவில் பிரக்ஞானந்தாவை விட சிறந்த தரநிலை கொண்டவர்கள் குகேஷூம், அர்ஜூனும் என்பதை நினைவில் வைக்கவும்.

உலகக்கோப்பை வென்ற அணியில் கோப்பையை கையில் ஏந்தியதே குகேஷ் தான். மற்றவர்களை தமிழக ஊடகங்கள் மிகைப்படுத்தி சொல்லாததால் நமக்குத் தெரியவில்லை.

பிரக்ஞானந்தா மட்டும் புகழ் வெளிச்சம் பெற அவருடைய அக்கா வைஷாலியும் பெண்கள் பிரிவில் அசத்தி வருவதும் ஒரு காரணமாக இருக்கிறது.

உலக சதுரங்க வெற்றியாளர் போட்டியானது முந்தைய ஆண்டின் வெற்றியாளருக்கும் அவரை எதிர்க்க இந்த ஆண்டின் சிறந்த செயல்பாடு கொண்ட வீரருக்கும் நடக்கும் போட்டியாகும்.

அந்த சிறந்த செயல்பாடு கொண்ட வீரரை எப்படித் தேர்வு செய்வார்கள் எனில், உலகில் நடைபெறும் பல்வேறு தொடர்களின் வாயிலாக சிறந்த 8 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த 8 பேர் இடையே இரண்டு முறை ராபின் முறையில் போட்டிகள் நடைபெறும். இவர்களில் முதலிடத்தை பெறுபவரே முந்தைய வெற்றியாளருடன் மோத வேண்டும்.

அப்படி 8 பேர்களிடமும் போட்டியிட்டு முதலிடத்தைப் பிடித்தவர்தான் குகேஷ். எட்டுப் பேரில் பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி என்ற இரண்டு இந்தியர்களும் இருந்தனர்.

ரவுண்ட் ராபின் முடிவில் குகேஷ் 9 புள்ளிகளைப் பெற்றிருந்தார். 5 வெற்றிப் புள்ளிகளையும், 4 சமநிலைப் புள்ளிகளையும் (8 போட்டிகள் சமநிலை) பெற்றிருந்தார். ஒரே ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவினார்.

இந்த எட்டுப் பேரிலும் குகேஷ் தகுதி பெற்றது சுவாரசியமான விஷயம் ஆகும். அவர் தகுதி பெற்ற பிரிவில் அவர் இரண்டாவது இடத்தையே பிடித்திருந்தார்.

அந்தப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்திருந்த வீரர் ஏற்கெனவே வேறொரு பிரிவில் தகுதிப் பெற்றுவிட்டதன் காரணமாக, இரண்டாம் இடத்தைப் பெற்ற குகேஷ் உலக வெற்றியாளர் போட்டிக்குத் தகுதி பெற்றார்

குகேஷ் அப்பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடிக்க சென்னை மாஸ்டர்ஸ் போட்டியில் அவர் முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றதும் முக்கிய காரணமாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது.

இப்படித்தான் பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி எல்லோரையும் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குச் சென்று டிங் லிரனையும் வீழ்த்தி உலக சதுரங்க வெற்றியாளரானார் குகேஷ்.

விஸ்வநாதன் ஆனந்த் சொன்னது போல் சதுரங்கப் போட்டிகளில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தும் காலம் வந்துவிட்டது. உலக தரவரிசைப் பட்டியலில் வரிசை கட்டி நிற்கிறார்கள் இந்தியர்கள் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

குறிப்புச் சொற்கள்