சந்தைப் பொருளியலைப் பார்க்கையில் ஒரு பொருள், அல்லது சேவையின் விலை எப்போதுமே மாறிக்கொண்டேதான் இருக்கும். சிலவற்றின் விலை குறையும். சிலவற்றின் விலை அதிகரிக்கும்.
தனிப்பட்ட ஒரு பொருள் அல்லது சேவை என்று இல்லாமல், பரந்த அளவில் விலைகள் கூடினால் பணவீக்கம் ஏற்படும். நடைமுறையில் பணத்தின் மதிப்பு குறைந்து, பொருள், சேவையின் மதிப்பு அதிகமாக இருக்கும்.
மொத்தத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும். இதைத்தான் இப்போது உலகம் அனுபவித்து வருகிறது. உலகம் முழுவதுமே பணவீக்கம் அதாவது விலைவாசி இப்போது அதிகமாக இருக்கிறது.
அதாவது அதே ஒரு பொருளை வாங்க முன்பு செலவிட்டதைவிட அதிக பணத்தை இப்போது செலவிட வேண்டிய நிலை இருக்கிறது.
அதேபோல் உங்களிடம் இப்போது இருக்கும் பணத்தைக் கொண்டு முன்பு வாங்கியதைப்போல் அதே பொருளை வாங்க இயலாது. பணவீக்கம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. சிங்கப்பூரில் அண்மைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பணவீக்கம் அதிகமாக இருக்கிறது.
பணவீக்கம் பற்றி அரசாங்கம் கடந்த புதன்கிழமை ஆகப் புதிய தகவல்கள், புள்ளிவிவரங்களை வெளியிட்டது. பணவீக்கம் இந்த ஆண்டு முழுவதுமே தொடர்ந்து இருந்து வரும் என்பது அதன் மூலம் தெரிய வருகிறது.
இப்படித்தான் பொருளியல் வல்லுநர்கள் பலரும் முன்னுரைத்து இருக்கிறார்கள். உலக அளவில் விலைகள் கொஞ்சம் இறங்குமுகமாகத் திரும்ப வாய்ப்பு இருக்கிறது என்றாலும்கூட பணவீக்கம் இந்த ஆண்டில் நீடிக்கவே செய்யும் என்பதே கணிப்பாக உள்ளது.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு விலைவாசி எப்படி இருந்தது என்பதைப் பார்க்கும்போது, எல்லா பொருள்களுக்குமான பணவீக்கம் 6.1% அளவுக்கு கூடியது.
அதாவது $100 செலவிடுவதற்குப் பதிலாக $106.1 செலவிடவேண்டிய நிலை இருந்தது.
இந்தப் பணவீக்க விகிதம் 2021ஆம் ஆண்டில் 2.3% ஆக நிலவியது. பணவீக்கத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று மூலாதாரப் பணவீக்கம். அதாவது குடியிருப்புச் செலவு, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றைச் சேர்க்காமல் கணக்கிடுவது மூலாதாரப் பணவீக்கம் எனப்படுகிறது.
மற்றொன்று ஒட்டுமொத்தப் பணவீக்கம். இது அனைத்தையும் உள்ளடக்கி கணக்கிடப்படுவதாகும். சிங்கப்பூரில் மூலாதாரப் பணவீக்கம் சென்ற ஆண்டில் 4.1% கூடியது. இந்த அதிகரிப்பு 2021ல் 0.9%தான். 2022ல் பணவீக்க அதிகரிப்பு மிக அதிகம். இந்த நிலவரம் உடனடியாக மாறிவிடும் என்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
அனைத்துப் பொருள்களுக்கான பணவீக்கம் சென்ற ஆண்டு நவம்பரைவிட டிசம்பரில் குறைந்தது என்றாலும் ஒரு மாத நிலவரத்தை மட்டும் வைத்துக்கொண்டு கணக்கிடுவது சரியானதாக இருக்காது. மொத்தமாக பார்க்கையில் இந்த ஆண்டில் பணவீக்கம் தொடரும் என்றுதான் தெரிகிறது.
சிங்கப்பூரின் மத்திய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் இந்த ஆண்டின் முதல் பாதியில் நிலவரங்கள் எப்படி இருக்கும் என்பதன் தொடர்பான எதிர்பார்ப்புகளை வெளியிட்டுள்ளன.
ஊழியர்கள் கிடைப்பது சிரமமாகவே இருக்கும்; இதன் விளைவாக சம்பளம் கூடும்; ஒரு பொருளை உற்பத்தி செய்ய அல்லது சேவையை வழங்க செலவு அதிகமாக இருக்கும்; இதனால் பயனீட்டுப் பொருள்களின் விலை உயரும்.
இது ஒருபுறம் இருக்க, வாகன வாங்குரிமைச் சான்றிதழ் வரம்பு தளராமல் இருக்கும்; வாடகை வீட்டுக்குத் தேவை அதிகமாகவே இருந்துவரும்;
இவற்றின் விளைவாக, கார்களின் விலை, குடியிருப்புச் செலவு கூடவே செய்யும் என்று ஆணையமும் அமைச்சும் கணித்துள்ளன.
அதேவேளையில், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நிலவரங்கள் கொஞ்சம் மேம்படும் என்று இவை எதிர்பார்க்கின்றன, அதிக நம்பிக்கையுடன் இருக்கின்றன. அதாவது ஜூலை முதல் டிசம்பர் வரைப்பட்ட இரண்டாம் பாதியில் உள்ளூரில் ஊழியர் பற்றாக்குறை கொஞ்சம் குறையும். உலக அளவில் பணவீக்கம் கொஞ்சம் மெதுவடையும் என்று அவை நம்புகின்றன.
இருந்தாலும்கூட அனைத்துப் பொருள்களின் பணவீக்கம் இந்த ஆண்டு முழுமைக்கும் 4.5% முதல் 5.5% வரை இருக்கும் என்பதே கணிப்பாக இருக்கிறது. அதேபோல் மூலாதார பணவீக்கம் 2.5% முதல் 3.5% வரை இருக்கும். பொதுவாக பார்க்கையில் இந்த அளவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை ஒருபுறம் இருக்க, பணவீக்கம் அதிகரிக்கும் என்பதற்கான ஆபத்துகளும் இருப்பதாக இந்த இரண்டு அமைப்புகளும் எச்சரித்து இருக்கின்றன. உலகில் எரிசக்தி, உலோகம், உணவுப்பொருள்களை ஆக அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளில் சீனாவும் ஒன்று. அந்த நாடு பொருளியலை மீண்டும் திறந்துவிடும்போது பொருள்களுக்கான தேவை மிக அதிகமாகிவிடும்.
சீனாவின் பொருளியல் இந்த ஆண்டின் பிற்பகுதியில் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், உக்ரேனில் போர் தொடர்வதால் இத்தகைய பொருள்கள் கிடைப்பதும் தொடர்ந்து சிரமமாகவே இருந்து வரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.
அந்தப் போர் காரணமாக குறிப்பாக உணவுப்பொருள்கள், உரம் கிடைப்பது தடைபடலாம்.
சீனா தன் எல்லைகளைத் திறந்துவிடுவதால் அந்த நாட்டினர் வெளிநாடுகளுக்கு அதிகமாகப் பயணம் மேற்கொள்வார்கள். இதன் காரணமாக சுற்றுலா, விருந்தோம்பல் துறைகளில் செலவு கூடும் வாய்ப்பும் இருக்கிறது.
மொத்தத்தில் எல்லாவற்றையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த ஆண்டில் பணவீக்கம் தொடரவே செய்யும் என்ற முடிவுக்குத்தான் வர முடிகிறது.
அப்படியே பணவீக்கம் குறைந்தாலும் அது கணிசமான அளவுக்கு இருக்காது என்றுதான் கூற முடிகிறது.