இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகிறது ‘800’.
கிரிக்கெட் களத்தில் அவர் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அதைக் குறிக்கும் விதமாக படத்துக்கு தலைப்பு வைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல், மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கி உள்ளார்.
இந்நிலையில், இப்படக் குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ‘800’ படத்தை வெங்கட் பிரபுதான் இயக்க இருந்ததாக முரளிதரன் குறிப்பிட்டார்.
வெங்கட் பிரபுவின் மனைவியும் தனது மனைவியும் சிறு வயது தோழிகள் என்றும் இருவரும் அவ்வப்போது சந்தித்துப் பேசுவது வழக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
“அவ்வாறான ஒரு சந்திப்பின்போது தனது வாழ்க்கை வரலாற்றுப் படத்தை உருவாக்கலாம் என்று வெங்கட் பிரபு கூறினார். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு மக்களுக்கு உதவலாம் என்ற யோசனையையும் முன்வைத்தார்.
“இயக்குநர் வெங்கட்பிரபு, இயக்குநர் ஸ்ரீபதி ஆகியோருடன் இணைந்து ஒரு மன்றத்தை அமைத்துள்ளேன். நான் சிரமத்தில் இருந்தபோது என் தாய்நாடு உதவி செய்தது.
“எனவே, என் நாட்டுக்கும் அங்குள்ள மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே அந்த மன்றம் உருவானது,” என்றார் முரளிதரன்.
தனது மன்றத்தின் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பது, ஆயிரம் மாணவர்களை படிக்க வைப்பது உள்ளிட்ட நல்ல செயல்களில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்றார்.
இந்தப் படத்தை வெங்கட்பிரபுதான் இயக்குவதாக இருந்தது என்றும் தயாரிப்பாளருடன் பிரச்சினை ஏற்பட்டதால் அவர் விலகிவிட்டார் என்றும் முரளி தரன் குறிப்பிட்டார்.
“என்னைப் பற்றி நன்கு ஆராய்ந்துதான் ‘800’ படத்துக்கான கதையை இயக்குநர் ஸ்ரீபதி எழுதி உள்ளார். ஸ்ரீபதியை நான்தான் இயக்கச் சொன்னேன். பின்னர் விஜய்சேதுபதி இப்படத்தில் இணைந்தார்.
“ஆனால், அதிலும் பிரச்சினை வந்தது. நாங்கள் மலையகத் தமிழர்கள் வம்சாவளியில் வந்தவர்கள். வாழ்க்கையில் முன்னேற பல தடைகளை எதிர்கொண்டோம்.
“என்னைப் பற்றிய படத்துக்கும் அப்படியான தடைகள் ஏற்பட்டன. இலங்கையில் 80 நாள்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு இலங்கை அரசு ஒத்துழைப்பு கொடுத்தது.
“கிரிக்கெட் பற்றிய படமாக மட்டுமல்லாமல் நான் படைத்த சாதனைகளின் பின்னணி குறித்தும் நான் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்தும் விவரித்துள்ளோம்.
“மேலும், என்னால் இலங்கைக்கு கிடைத்த பெருமை குறித்தும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்,” என்றார் முரளி தரன்.
முன்னதாக, ‘800’ படத்தின் கதாநாயகனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனினும், அவர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர் இப்படத்தில் இருந்து விலக நேரிட்டது.