மும்பை: இலங்கையின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘800’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் முன்னோட்டக் காட்சி இம்மாதம் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மும்பையில் வெளியிடப்படவுள்ளது.
அந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆக அதிகமாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்தவர் முரளி. கடந்த 2010 ஜூலை 22ஆம் தேதி இந்தியாவிற்கெதிரான போட்டியில் அவர் தமது 800வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.
சென்னை மலர் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ராமமூர்த்தியின் மகள் மதிமலரைத் தம் வாழ்க்கைத்துணையாகக் கைப்பிடித்தார் முரளி. இவர்களது திருமணம் 2005 மார்ச் 21ஆம் தேதி நடைபெற்றது.
‘800’ திரைப்படத்தில் முரளியாக மதுர் மிட்டலும் மதிமலராக மகிமா நம்பியாரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இடம்பெற்றது.
முன்னோட்டக் காட்சி வெளியீட்டு நிகழ்வில் முரளியுடன் படப்பிடிப்புக் குழுவினரும் கலந்துகொள்ள உள்ளனர். சிறப்பு விருந்தினராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியாவும் அழைக்கப்பட்டுள்ளார்.