நடிகர் சந்தானத்திற்கு மூன்று கோடி ரூபாய் ஊதியம் கொடுத்ததாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேலும் தொடக்கத்தில் ஒருசில லட்சங்களை மட்டுமே ஊதியமாக பெற்று வந்துள்ளார் சந்தானம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘80ஸ் பில்ட்அப்’. வரும் 24ஆம் தேதி இப்படம் திரைகாண உள்ளது.
இதையொட்டி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய போதே சந்தானத்தின் சம்பள விவரங்களைத் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
“சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் நடித்தபோது சந்தானத்திற்கு 1.75 ரூபாய் லட்சம் சம்பளமாகக் கொடுத்தேன்.
“அதன் பிறகு வேறு ஒரு படத்திற்கு 18 லட்சம் ரூபாய் கொடுத்த நினைவு இருக்கிறது. பின்னர் எனக்குத் தெரிந்த ஒருவர் 56 லட்சம் தொகையை சந்தானத்திற்கு ஊதியமாக வழங்கியது தெரியும். பிறகு அந்த தொகை 1.25 கோடியாக உயர்ந்தது. இப்போது சந்தானத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது.
“இந்த புதிய படத்திற்காக அவருக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருக்கிறேன். இது மேலும் வளர்ந்து 30 கோடி ரூபாய் சம்பளம் பெரும் அளவிற்கு சந்தானம் வளர்ச்சி காண வேண்டும்,” என்று வாழ்த்தினார் ஞானவேல்ராஜா.
இதற்கிடையே, ‘80ஸ் பில்ட்அப்’ படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனால் படம் நல்ல வசூல் காணும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சந்தானத்தின் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது என்று கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகளும் கூறுகின்றனர்.