ஹன்சிகா நடிப்பில் அடுத்து வெளியாகிறது ‘மை நேம் இஸ் ஸ்ருத்தி’.
தெலுங்கு இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ஓம்கார் இயக்கியுள்ள இந்தப் படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.
‘ஆடுகளம்’ நரேன், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் கதையை இயக்குநர் விவரித்தபோது நடிக்க பயந்தாராம் ஹன்சிகா.
“மனிதர்களைக் கடத்தி அவர்களுடைய தோலை விற்கும் கும்பலைப் பற்றி இயக்குநர் சொன்னபோது இப்படியெல்லாம் நடக்குமா என்று சந்தேகப்பட்டேன்.
“எனது தாயார் ஒரு மருத்துவர் என்பதால் அவரிடம் விளக்கம் கேட்டேன். அப்போதுதான் இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ஓம்கார் குறிப்பிட்ட அனைத்தும் உண்மை என்பது தெரிய வந்தது.
“இந்தக் கொடுமை பல காலமாக நடந்து வருகிறது. இப்போதும் உலகம் முழுவதும் இதுபோன்ற ஆள்கடத்தல் சம்பவங்கள் நிகழ்கின்றன என்று என் தாயார் கூறினார். அதன் பிறகே இந்தப் படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன்,” என்கிறார் ஹன்சிகா.
கதைப்படி, ஊடகங்களுக்கு விளம்பரங்கள் பெற்றுத் தரும் நிறுவனம் ஒன்றை நடத்துகிறார் கதாநாயகி.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, ஆள் கடத்தல் கும்பலிடம் அவர் சிக்கிக் கொள்ள நேரிடுகிறது. அந்தக் கும்பலிடம் இருந்து அவரால் தப்பிக்க முடிகிறதா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இதை மிகுந்த விறுவிறுப்பான திரைக்கதை காட்சி அமைப்புகள் மூலம் படமாக்கி உள்ளனராம்.
ஹன்சிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக இயக்குநர் தரப்பு பாராட்டுகிறது. சில சண்டைக் காட்சிகளில் அசத்தி உள்ளாராம்.
“மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் அந்தக் கடத்தல் கும்பலைச் சமூகத்திற்கு அடையாளம் காட்டுகிறார் ஹன்சிகா. இதற்காகப் பல்வேறு ஆபத்துகளை அவர் எதிர்கொள்ள நேரிடுகிறது.
“எனவே சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று ஹன்சிகாவிடம் தொடக்கத்திலேயே தெரிவித்துவிட்டேன். அவரும் அதற்காகத் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார்.
“இந்த சண்டைக் காட்சிகள் வழக்கமாக கதாநாயகர்கள் திரையில் மோதும் சண்டைக் காட்சிகளை போல் இருக்காது. என் வயது கொண்ட, எனது வலிமையைக் கொண்ட பெண் எப்படி சண்டையிடுவாளோ அதுபோன்று மிக யதார்த்தமாக இருக்கும்,” என்கிறார் இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ஓம்கார்.
திருமணத்துக்குப் பிறகு தரமான படைப்புகளில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம் ஹன்சிகா. அதனால் கதை கேட்கும் விஷயத்தில் மிகுந்த கவனம் கொடுத்து வருகிறார்.
இவரிடம் கதை சொல்ல ஏராளமான இளம் இயக்குநர்கள் விரும்புகின்றனர். அவர்களிடம் கதை கேட்கும் முன்பே தேவையற்ற கவர்ச்சி, ஆபாசம் கூடாது என்பதை தெளிவாகத் தெரிவித்துவிடுகிறார்.
அதேபோல் குறித்த நேரத்துக்குள் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவதாகத் தகவல்.
இதற்கிடையே, தனி நாயகியாக நடிப்பதற்கும் ஹன்சிகாவுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.
இந்நிலையில், முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிப்பதில் இவர் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
நயன்தாரா, திரிஷாவைப் போல் தனி நாயகியாக நடித்து பெயர் எடுத்துவிட்டால் தனது இரண்டாவது சுற்று திரைப்பயணம் சுமூகமாகவும் சிரமங்கள் இன்றியும் இருக்கும் எனக் கருதுகிறாராம்.
இதுபோன்ற திட்டங்களை மனதிற்கொண்டுதான் அவர் அடுத்தடுத்த படங்களைத் தேர்வு செய்வதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.