புது முகங்கள் நடிப்பில் உருவாகி உள்ளது ‘பாய்’ திரைப்படம். இதில் ஆதவா ஈஸ்வரா நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ்கெரும் நடித்துள்ளனர்.
கமலநாதன் புவன்குமார் எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியே சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இந்நிலையில் பாடல் வெளியீட்டு விழாவையும் நடத்தி முடித்துள்ளனர்.
முதல்தோற்றச் சுவரொட்டியில் படத்தின் தலைப்பான ‘பாய்’ என்பதற்கு கீழே ‘ஸ்லீப்பர் செல்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர்.
“‘பாய் என்றால் சகோதரன் மட்டும் அல்ல, நண்பன் என்றும் பொருள் கொள்ளலாம்’. படத்தின் முதல் பாதியில் சில கேள்விகள் எழுப்பப்பட்டு இரண்டாம் பாதியில் அவற்றிற்குரிய பதில்களைத் தரும் வகையில் திரைக்கதை இருக்கும்.
‘எந்த மதத்தையும் புண்படுத்த வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. மனித நேயம் அனைத்துக்கும் அடிப்படையானது என்பதைத்தான் வலியுறுத்தியுள்ளோம். இந்தக் கருத்தை பிரதிபலிக்கும் வகையில்தான் படத்தின் சுவரொட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
“எனது விளக்கத்திற்குப் பிறகும் பலருக்கு சந்தேகம் எழக்கூடும். எனினும் படம் வெளியான பிறகு அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் இந்தப் படைப்பு இருக்கும் என நம்புகிறோம் என்றார் இயக்குநர்.