ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை நடைபெற்றது மார்சிலிங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்த ‘தமிழர் திருநாள் - நவரச மேடை 2024’.
தொடக்கநிலை மாணவர்களுக்கான போட்டிகளான ‘நவரச மேடை 2024’, இவ்வாண்டு அதன் வரலாற்றிலேயே (2022 முதல்) ஆக அதிகமான போட்டியாளர்களின் படைப்புகளைப் பெற்றது.
ஆறு பிரிவுகளில், 36 தொடக்கநிலைப் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் மொத்தம் 135 தமிழ்க் காணொளிப் படைப்புகளை அனுப்பியிருந்தனர்.
தாய்மொழியார்வத்தை சிறுவர்களிடத்தில் மின்னிலக்க ஊடகங்கள்வழி வளர்ப்பதன் வெற்றியை இந்த எண்ணிக்கை பறைசாற்றியது.
தொடக்கநிலை ஒன்றுக்குப் பாடல், தொடக்கநிலை இரண்டுக்கு வெவ்வேறு தொழில்களில் பணியாற்றுவோராக நடிப்பு, தொடக்கநிலை மூன்றுக்கும் ஐந்துக்கும் பேச்சு, தொடக்கநிலை நான்குக்குக் கதை சொல்லுதல் மற்றும் தொடக்கநிலை ஆறுக்கு இணைய கதைப் புத்தகம் உருவாக்குதல் என ஆறு போட்டிகள் நடைபெற்றன.
“விரைவாக மாறிவரும் உலகில், நம் பண்பாட்டு, மரபோடு ஒன்றியிருப்பது மிக முக்கியம். நம் தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்கானது மட்டுமல்ல; நம் மரபில் முக்கிய பங்கை விகிப்பது.” என்றார் தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சரும் மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான திரு ஸாக்கி முகம்மது.
“பொதுவான மொழியைப் பேசுவது சமூக உணர்வை வளர்க்கிறது. காணொளி வடிவில் அமைந்த போட்டி, அனைத்துப் பின்னணிகளையும் சார்ந்த மாணவர்கள் தம் மொழித் திறன்களைக் காண்பிக்க நல்வாய்ப்பளித்தது,” என்றார் மார்சிலிங் இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினரும் ‘நவரச மேடை 2024’ன் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான திருமதி நூர்மானிஷா சர்மணி.
“இப்போட்டிகள், வகுப்பறையைத் தாண்டி தமிழ்மொழியின் அழகைப் பாராட்ட எனக்குக் கற்பித்தும், என் தாய்மொழியைப் பயன்படுத்துவதில் எனக்குள்ள தன்னம்பிக்கையை அதிகரித்தும் உள்ளது,” என்றார் தொடக்கநிலை ஆறு மாணவர்களுக்கான போட்டியின் வெற்றியாளர் ஜெயகுமார் சந்திரிகா.