பொங்கலுக்கு சிறப்பு படங்களாக தமிழ், தெலுங்கில் வெளியாக இருந்த ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ படங்கள் தெலுங்கில் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
பொங்கல் போட்டியாக தமிழிலும் தெலுங்கிலும் சில பல படங்கள் வெளியாகின்றன. தமிழில் தயாரான இரண்டு முக்கிய படங்களான ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ ஆகிய இரண்டு படங்களையும் ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்து தமிழில் வெளியாகும் ஜனவரி 12ஆம் தேதியன்றே வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால், நேரடித் தெலுங்குப் படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு திரையுலகத்தின் சில முக்கிய புள்ளிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தம் கொடுத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளனர்.
அதன் காரணமாக ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ ஆகிய இரண்டு படங்களின் தெலுங்கு வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். இதனால், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் தெலுங்கு முன்னோட்டக் காட்சியைக் கூட வெளியிடவில்லை.
தமிழ்ப் படங்களுக்கு தெலுங்கு மாநிலங்களில் இப்படி எதிர்ப்பு உள்ள நிலையில் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் மட்டும் ஹைதராபாத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அதனால், தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்கள் மட்டுமே பலனடைகிறார்கள். இங்கு படப்பிடிப்பு நடத்தாத காரணத்தால் தமிழ் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள்.
இதுகுறித்து தமிழ் சினிமா உலகில் உள்ள எந்த ஒரு சங்கமும் அவர்களது கருத்துக்களை வெளியிடுவதில்லை. சில தயாரிப்பாளர்கள் இரண்டு மொழிகளிலும் படங்களைத் தயாரிப்பது, வெளியிடுவது என இருக்கிறார்கள்.
சில நடிகர்கள் இரண்டு மொழிகளிலும் நடிக்கிறார்கள். சில இயக்குநர்கள் இரண்டு மொழிகளிலும் இயக்குகிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தின் இத்தகைய போக்கை அவர்கள் கண்டித்தால் அங்கு சென்று வேலை செய்ய முடியாது. எனவே, அவர்கள் இந்த சர்ச்சையை அமைதியாகக் கடந்து போகிறார்கள்.
‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ படங்கள் தமிழில் முதலில் வெளியாக இருக்கிறது. அந்தப் படங்கள் வெற்றி பெற்றால் தயாரிப்பாளருக்கு நல்லது. ஆனால் எதிர்மாறாக தமிழில் தோல்வியடைந்தால் தள்ளி வெளியாகும் தெலுங்கில் அந்தப் படங்களை வெளியிட முடியாத சூழலே உருவாகும்.
தமிழ்ப் படங்கள் அங்கு வெளியாகவில்லை என்றாலும் பரவாயில்லை தெலுங்குப் படமான ‘ஹனு மான்’ படத்தை இங்கு வெளியிடுவோம் என அதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு இதுவரை தமிழகத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் யாரும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் தனுஷ் நடித்தது குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் நேர்காணல் ஒன்றில் பேசியபோது, “படத்தில் உருக்கமான மூன்று காட்சிகள் உள்ளன. அவ்வளவு ஆழமாக நான் காட்சிகள் இதுவரை எடுத்ததில்லை. இந்தக் காட்சியைப் படம்பிடிக்கும்போது தனுஷ் எப்படி செய்வார் என்று நினைத்தேன்.
“ஆனால் அவர் மிகவும் எளிமையாக நடித்துவிட்டார். எனக்கு அப்போது அந்த காட்சியை பார்க்கும் பொழுது விருப்பமே இல்லாமல் தனுஷ் நடித்ததுபோல இருந்தது.
“ஆனால், எடிட்டிங்கில் பார்க்கும் பொழுது மிகவும் அருமையாக இருந்தது. உணர்வுபூர்வமான காட்சிகளில் நடிப்பது தனுஷிற்கு மிகவும் பிடித்த விஷயம்,” என்று பேசினார்.
‘கேப்டன் மில்லர்’ படத்துடன் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படமும் மோதவுள்ளது. ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமாரின் இரண்டாவது படைப்பாக உருவாகியுள்ள ‘அயலான்’ படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் இந்த பொங்கலுக்கு ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’, ‘மிஷின்’ படங்களும் வெளியாக உள்ளன.