“இரண்டு பேர் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார்கள். பல ஆண்டுகள் நீடிக்கும் இந்தக் காதலில் திடீரென ஓர் இடைவெளி ஏற்பட்டு இருவரையும் பிரிக்கிறது. இந்த இடைவெளி இருவரையும் என்னவெல்லாம் செய்கிறது என்பதுதான் ‘லவ்வர்’ படத்தின் கதை,” என்கிறார் அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ்.
இன்றைய நவீன, தொழில் நுட்ப உலகில் காதலும் அது படுகின்ற பாடுகளையும் இந்தப் படம் விரிவாக அலசுகிறதாம்.
கருத்தாக எதையும் சொல்ல நினைக்காமல் ஒரு கவனிப்பாக மனநிலைகளை சுட்டிக்காட்ட முயற்சி மேற்கொண்டுள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர்.
“மனித மனதிற்குள்ளே காதல் எத்தகைய தொந்தரவுகளை செய்கிறது, அவற்றில் இருந்து மீண்டு வருவது எப்படி என்றும் அலசி தீர்வுகளைச் சொல்லி இருக்கிறேன்.
“ஒவ்வொரு தலைமுறை வரும்போதும் காதலின் தன்மை மாறியபடியே இருக்கும். ஆனால் என்று வரும்போது அதற்கே உள்ள வலியும் மகிழ்ச்சியும் அப்படியேதான் இருக்கும்.
“அவற்றை எதிர்கொள்ளும் முறைகள் மாறியிருக்கலாம். இரண்டு மனங்கள் ஒத்துப்போகும் போதும், சேர்ந்திருக்கும் போதும், பிரியும்போதும் ஏற்படுகிற உணர்வுகளில் மாற்றமே இல்லை. முரட்டுத்தனமான காதலின் சில வடிவங்களும் இதில் அடங்கும்,” என்று விரிவாகப் பேசுகிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.