கீர்த்தி பாண்டியன் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசியபோது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது என்று பேசினார்.
நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பாக ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சவுந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ப்ளூ ஸ்டார்’. அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ருத்வி, பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட காட்சிவெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.
அதில் கீர்த்தி பாண்டியன் பேசும் போது, “இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது. அமர்ந்து பேசுவதற்குக் கூட இடம் கிடைக்காமல் நானும் இயக்குநர் ஜெயக்குமாரும் பைக்கில் 15 நிமிடத்திற்கும் மேல் அலைந்து திரிந்தோம். பின்னர் ஓர் இடத்தில் அமர்ந்து கதையை என்னிடம் இயக்குநர் விளக்கினார். கதை பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்தேன். இப்படத்தில் இயக்குநர் ரஞ்சித் இருக்கிறார் என்று தெரிந்ததுமே எல்லோருமே என்ன அரசியல் பேசத் துவங்கிவிட்டீர்களா என்று கேட்கிறார்கள். நான் அவர்களைப் பார்த்து, பேசினால் என்ன தவறு என்று கேட்கிறேன். நாம் உண்ணும் உணவு, உடை என்று ஒவ்வொன்றிலும் இன்று அரசியல் இருக்கிறது. நம் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது. நாம் அரசியல் பேசாமல் தவிர்ப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று ஆகிவிடாது,” என்றார். அசோக்செல்வன் பேசும்போது, “வாய்ப்பு தேடி அலையும் காலத்தில் யாரும் அரவணைத்து ஆறுதல் கூறி, நம்பிக்கை கொடுக்கமாட்டார்களா என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி ஏங்கிக் கொண்டிருக்கும் அத்தனை இளைஞர்களுக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ நம்பிக்கையை கொடுக்கும்,” என்றார்.