கடவுள் இல்லாமல்கூட பல ஆண்டுகள் வாழ்ந்துவிடலாம் என்றும் மனிதர்கள் இல்லாமல் தம்மால் இருக்க முடியாது என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தனது மகள் ஷ்ருதியுடன் கலந்துரையாடும் காணொளி தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்.
அதில், ‘இனிமேல்’ என்ற இசைத்தொகுப்புக்கு தாம் எழுதிய பாடல் வரிகள் குறித்து கமல் விவரித்துள்ளார்.
இந்த உரையாடல் நிகழ்ச்சியை கமல்ஹாசனின் படத்தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
அதில் ‘இனிமேல்’ பாடலை இருவரும் இணைந்து பாடும் காட்சி இடம் பெற்றுள்ளது.
அப்பாடலைத் தாம் உணர்வுபூர்வமாக எழுதியதாக குறிப்பிட்டுள்ள கமல், தந்தை - மகள் இடையேயான அன்பு, புரிந்துணர்வு குறித்து பல விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.
“இந்த உரையாடல் மூலம் பல்வேறு கேள்விகளை எழுப்ப முடிந்தது. நீண்ட நாள்களாக அப்பாவிடம் கேட்க நினைத்திருந்த பல கேள்விகளைக் கேட்க முடிந்தது,” என்று ஷ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் கூறுகையில், “கடவுள் இல்லாமல் ஐம்பது ஆண்டுகள் இருந்துவிட்டேன். ஆனால் மனிதர்கள் இல்லாமல் ஐந்து நிமிடங்கள்கூட என்னால் இருக்க முடியாது,” என்று குறிப்பிட்டுள்ளார்.