சிங்கப்பூரில் பல இன கலாசார மக்கள் ஓரிடத்தில் திரள்வதைக் கொண்டாடும் ‘ஹார்மனி ஸ்போர்ட்ஸ் ஃபியஸ்டா’ எனப்படும் நல்லிணக்க விளையாட்டுத் திருவிழா, சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் சனிக்கிழமை (ஜூலை 22) தொடங்கியது
இன நல்லிணக்க நாளுக்கு மறுநாள் இடம்பெறும் இந்நிகழ்ச்சியில் 1,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் திரண்டு தங்களது சொந்த அல்லது பிற இன பாரம்பரிய உடையில் நடனம் போன்ற உடற்பயிற்சியைச் செய்வர். அந்த ஆறு நிமிட நடன உடற்பயிற்சியில் வெவ்வேறு கலாசார அம்சங்கள் சேர்க்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நடனமணிகள், இசைக்கலைஞர்கள், நடிகர்கள் எனப் பலர், விளையாட்டு மையத்தில் உள்ள ஓசிபிசி சதுக்கத்தில் பண்பாட்டு அங்கங்களைப் படைப்பர்.
கேரம், மணற்பள்ள விளையாட்டு (goli sandpit), பரமபதம், கோங்காக் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளின் மிகப்பெரிய வடிவங்களும் இதில் இடம்பெறும்.
நினைவுப்பொருள்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல விரும்புவோர், முடிச்சுகளால் செய்யப்படும் சீனக் காப்புகள், மலாய்-இந்தோனீசிய ‘வாயாங் குலிட்’ பாவைகள், ரங்கோலி வண்ண மணல் ஓவியங்கள் ஆகிவற்றை அங்கு உருவாக்கும் வாய்ப்பைப் பெற இயலும்.
கோரெங் பீசாங், முவா சீ, வடை உள்ளிட்ட தின்பண்டங்களும் சதுக்கத்தில் விற்கப்படும்.
சமய நல்லிணக்க வட்டமும் சிங்கப்பூர் விளையாட்டு மையத்தை நிர்வகிக்கும் ‘காலாங் அலைவ் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்’ நிறுவனமும் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருக்கிறார்.