உற்றார் உறவினர் கூடி மகிழவேண்டிய பண்டிகைக் காலம், கிறிஸ்துமஸ். பிச்சைமுத்து சாலமன், 66, வசிக்கும் இல்லத்திலோ சொந்தபந்தங்களுக்குப் பதிலாகச் சேவை அர்ப்பணிப்புடன் பராமரிப்பு இல்லப் பணியாளர்கள் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடிக் கொண்டாடினர்.
‘ஸ்டிஃப் பெர்சன் சிண்ட்ரோம்’ (Stiff person syndrome) எனும் அரியவகை நோயால் பெரும் வலிக்கு ஆளாகிப் படுத்த படுக்கையாக இருக்கும் தம் மனைவியை இருபது ஆண்டுகளாகத் தனியே பொறுப்பேற்றுப் பராமரித்து வருகிறார் கணவர் திரு சாலமன்.
பணிப்பெண் ஒருவருடன் வசிக்கும் இந்தத் தம்பதியருக்கு சன்லவ் முதியோர் இல்லப் பணியாளர்கள் சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் இன்ப அதிர்ச்சி தந்தனர்.
ஜாலான் காயு வட்டாரத்தில் 1957ல் பிறந்து வளர்ந்த திரு சாலமன், தொடக்கத்தில் பொதுப் பயனீட்டுக் கழகத்தில் பணிபுரிந்து பின்னர் கப்பல் துறை ஒருங்கிணைப்பாளராக வேலை செய்தார். மூன்று முறை ஆட்குறைப்புக்கு ஆளானதை அடுத்து 2005ஆம் ஆண்டிலிருந்து அவர் பகுதிநேரப் பாதுகாவல் அதிகாரியாகப் பணியாற்றினார்.
தாம் காதலித்த சரோஜா ரோசலிண்ட் என்பவரை 1984ஆம் ஆண்டில் கரம் பிடித்தார். இத்தம்பதியருக்கு மகன், மகள், இரு பேரன்கள் உள்ளனர். 1991ஆம் ஆண்டில் உடல் முழுவதும் கடுமையான வலியால் பாதிக்கப்பட்ட தம் மனைவியை திரு சாலமன் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், அப்போது திருவாட்டி ரோசலிண்டுக்கு என்னவாயிற்று என்பதை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சிங்கப்பூரில் ‘ஸ்டிஃப் பெர்சன் சிண்ட்ரோம்’ நோயால் பாதிக்கப்படும் முதல் நபர் திருவாட்டி ரோசலிண்ட் என்பதை 1995ல் மருத்துவர்கள் உறுதிசெய்தபோது தாம் திகைத்துப் போனதை திரு சாலமன் நினைவுகூர்ந்தார்.
நாளடைவில் தம் மனைவியின் நிலைமை மோசமாகி வர, இனி அவரால் சுயமாக நடமாட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. மனைவியைத் தூக்கிக் குளிப்பாட்டத் தன்னால் முடியாது என்பதால் சிறப்பு அம்சகங்களைக்கொண்ட கட்டிலையும் சக்கர நாற்காலியையும் கொண்டு அவர் நாட வேண்டியிருந்தது. இத்தகைய அபாயங்களுக்கிடையேயும் திரு சாலமன் தம் மனைவியை நன்முறையில் பராமரித்தார்.
மனைவியுடனான திரு சாலமனின் தாம்பத்திய வாழ்க்கை ஆறு ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்தது. அவரது மெய்யன்பைப் புரிந்துகொள்ள இயலாத சிலர், அவரை வேறொரு திருமணம் செய்துகொள்ளும்படி ஊக்குவித்தனர். ஆனால், அத்தகைய பேச்சுக்கே இடமில்லை என்று திரு சாலமன் இருந்துவிட்டார்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ சமூக ஊழியர் ஒருவர் மூலமாக சன்லவ் முதியோர் பராமரிப்பு இல்லத்தினரின் தொடர்பு இவருக்குக் கிட்டியது.
“திருவாட்டி ரோசலிண்டின் பராமரிப்புச் செலவுக்கு அரசாங்கம் 75% மானியம் வழங்குகிறது. எஞ்சிய செலவை சன்லவ் ஏற்கிறது,” என்று சன்லவ் இல்லத்தின் துணை மேலாளராகப் பணிபுரியும் திருவாட்டி மகாலட்சுமி அண்ணாமலை, 39, தெரிவித்தார். திரு சாலமனின் இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்த முடிந்தது குறித்து மகிழ்வதாகக் கூறினார் இவர்.
பல்வேறு சமூக அமைப்புகளையும் ஒப்பிட்டுக் கூறுகையில் சன்லவ் ஆகத் துரிதமாகவும் அக்கறையுடனும் செயலாற்றுவதாக திரு சாலமன் கூறினார்.
இதனால் தன் வீட்டில் கொண்டாட்டக் களை வந்துவிட்டதில் தனக்கு மகிழ்ச்சி எனக் கூறினார் அவர்.