குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்காக சந்தேக நபரை ‘பன்முனை வரைவி’ (பாலிகிராஃப்) சோதனைக்கு அதிகாரி உட்படுத்தும் காட்சியை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம்.
சிங்கப்பூரில் இதைத் தம் பணியாக மேற்கொண்டு வருகிறார் திரு மலரவன் பொன்னையா, 62.
ஒருவரின் முகபாவனை, நடத்தை ஆகியவற்றை உற்றுக் கவனித்து அவர் பொய் சொல்கிறாரா என்பதை நொடியில் கண்டுபிடிக்கும் 90-92% துல்லியத்தைக் கொண்ட வேலையை இவர் செய்துவருகிறார்.
ஒருவரது இதயத்துடிப்பு, சுவாசம் போன்ற உடல்சார்ந்த பண்புகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய உதவுகிறது ‘பாலிகிராஃப்’ சோதனைமுறை.
18 வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்த இவர், ‘பாலிகிராஃபி’ கற்றுக்கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த பயிற்றுநர்களின்கீழ் மூன்று மாதப் பயிற்சி பெற்று நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தார்.
ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு திரு மலரவன் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
‘செக்யூரிஸ்டேட்’ என்ற பாதுகாப்பு நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருக்கும் இவர், தமது நிறுவனத்தில் பாதுகாப்பு, கடற்கொள்ளை எதிர்ப்புச் சேவைகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, ‘பாலிகிராஃப்’ சேவையையும் வழங்கி வருகிறார்.
“சட்ட நிறுவனங்கள், காவல்துறை விசாரணையின்கீழ் இருப்பவர்கள், திருமண வாழ்வில் இன்னல்களைச் சந்திக்கும் தம்பதியர் ஆகியோரை நான் என் வேலையில் சந்தித்து வருகிறேன். சோதனை முடிவை நான் அவர்களிடமே தந்துவிடுவேன். நடவடிக்கை எடுப்பது அவர்களின் பொறுப்பு,” என்று விளக்கினார் திரு மலரவன்.
பதற்றத்துடன் தனது அறைக்குள் வருவோரை நிதானப்படுத்தி, எதற்காக அவர்கள் ‘பாலிகிராஃபி’ சோதனைக்கு வந்துள்ளார்கள் எனப் புரிய வைப்பார் திரு மலரவன்.
பிறகு, அவர் அந்த நபரை ‘பாலிகிராஃபி’ அறைக்கு அழைத்துச் சென்று கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்குச் சோதனையிடுவார்.
ஆதாரம் இல்லாத வழக்குகள் வரும்போது வழக்கறிஞர்கள் எளிதில் முடிவெடுக்க பாலிகிராஃபி சோதனை முடிவு பெரிதும் கைகொடுக்கிறது.
ஒருவரிடம் பேசும் அதேவேளை பல தகவல்களைத் திரட்டி, அவற்றின் அடிப்படையில் கேள்விகளை யோசித்துக்கொள்வார் திரு மலரவன்.
பல்வேறு குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்களைச் சந்திக்க இந்த வேலை வழிவகுத்துள்ளதாகக் கூறினார் இவர்.
“சிறு பொய்யாக இருந்தாலும் எளிதில் கண்டுபிடித்துவிடுவேன். அதனால் என் இரு மகன்களும் என்னிடம் உண்மையே பேசுவார்கள். என்னுடைய ஊழியர்களும் நேர்மையுடன் நடந்துகொள்கிறார்கள்,” என்று சிரித்தவாறே சொன்னார் திரு மலரவன்.