மாணவர்களிடையே தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட ‘தமிழோடு விளையாடு’ நிகழ்ச்சியின் ஐந்தாவது போட்டியில் இம்முறை இயூ டீ தொடக்கப்பள்ளி மாணவர்கள் வாகை சூடினர்.
ஏறத்தாழ 70 பள்ளிகளைச் சேர்ந்த தொடக்கநிலை ஐந்து, ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் அடங்கிய குழுக்கள் இப்போட்டியில் பங்கேற்றன.
அவற்றிலிருந்து 20 குழுக்கள் அரையிறுதிக்கும் பின்னர் இயூ டீ தொடக்கப்பள்ளி, வெஸ்ட்வூட் தொடக்கப்பள்ளி, நன் சியாவ் தொடக்கப்பள்ளி, ஹொராய்சன் தொடக்கப்பள்ளி, ஃபர்ஸ்ட் தோ பாயோ தொடக்கப்பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த குழுக்கள் இறுதிச் சுற்றுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இம்மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற இறுதிச் சுற்றில் தமிழறிஞர் டாக்டர் சுப. திண்ணப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இறுதிச் சுற்றில் வெஸ்ட்வூட் தொடக்கப்பள்ளி இரண்டாமிடத்தையும், நன் சியாவ் தொடக்கப்பள்ளி மூன்றாமிடத்தையும் பெற்றன.
இந்தப் போட்டி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ஏற்பாட்டிலும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடனும் நடத்தப்பட்டு வருகிறது.