ஆறு உலக நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயங்களை உள்ளடக்கிய ‘அப்பட்’ (Abbott) உலகப் பெரும் நெடுந்தொலைவு ஓட்டங்களை நிறைவு செய்த களிப்பில் திளைக்கிறார் வழக்குரைஞர் ரமேஷ் செல்வராஜ், 45.
இந்த வெற்றியின் நீட்சியாக, முன்னாள் போதைப் புழங்கிகளுக்கான இந்து அறக்கட்டளை வாரியத்தின் ‘ஆஷ்ரம்’ நன்கொடை அமைப்புக்காக இவர் மேற்கொண்ட நிதித்திரட்டுக்கு இதுவரை 22,000 வெள்ளி குவிந்துள்ளது.
‘அப்பட்’ நெடுந்தொலைவு ஓட்டங்கள் ஆறையும் முடிப்போர் ஆறு நட்சத்திர வெற்றியாளராக கெளரவிக்கப்படுவார். திரு ரமேஷுக்கு முன்னாள் இதுவரை 92 சிங்கப்பூரர்கள் ஓட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.
பாஸ்டனில் கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 15) நடைபெற்ற அந்த ஆறாவது நெடுந்தொலைவு ஓட்டத்தைத் திரு ரமேஷ் முடித்துக்கொண்டார்.
“இதற்கு முந்திய சனிக்கிழமையன்று பங்கேற்பாளர்களின் பயிற்சிக்காக ஐந்து கிலோமீட்டர் முன்னோட்ட ஓட்டத்தில் பங்கேற்றேன்,” என்று அவர் கூறினார்.
திங்கட்கிழமை காலை 11.30 மணி ஓட்டத்தைத் தொடங்கி இவர், நாலரை மணி நேரத்திற்கு 41.81 கிலோ மீட்டர் தொடர்ந்து ஓடினார்.
கேளிக்கை விழாவைப் போல காட்சியளித்த நெடுந்தொலைவு ஓட்ட இடத்தில் மாறுபட்ட குதூகலத்தை உணர்ந்ததாகக் கூறினார். இருந்தபோதும், குளிர்மிகுந்த சூழலில் கடந்த ஐந்து ‘அப்பட்’ நெடுந்தொலைவு ஓட்டங்களை நிறைவுசெய்த திரு ரமேஷ், இந்த நெடுந்தொலைவு ஓட்டத்தை வெப்பமான சூழலில் முடிக்க வேண்டி இருந்ததாகக் குறிப்பிட்டார்.
ஓட்டத்தில் மொத்தம் 26,000 பேர் பங்குபெற்றனர். 1,700 ஓட்டக்காரர்கள் ஓட்டத்தை முடிக்கவில்லை.
வெப்பம் மட்டுமின்றி பாதை மேடு பள்ளமாக ஏறி இறங்கி ஓடுவதற்கு சவாலாக இருந்ததாகத் திரு ரமேஷ் குறிப்பிட்டார். “இதற்கு முறையாக தயார்செய்ய சிங்கப்பூரில் மவுண்ட் ஃபேபர் போன்ற இடங்களில் பயிற்சி செய்யவேண்டும்,” என்று அவர் கூறினார்.
“ஒரு நாளுக்கு முன்பு நீரைக் குடித்துக்கொள்ளவேண்டும். தாகம் வராமல் இருந்தாலும் லிட்டர் கணக்கில் தொடர்ந்து குடித்து ஆக வேண்டியிருந்தது,” என்று அவர் கூறினார்.
அப்படி தயார் செய்தும் திரு ரமேஷின் உடலில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் முதல் 27 கிலாேமீட்டர் ஓட்டம் இவருக்குக் கடினமாக இருந்தது. உடலில் தண்ணீர்ச்சத்து குறைவாக இருப்பதாக உணரும் நிலையில் திரு ரமேஷ், அவ்வப்போது ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு தண்ணீர் அருந்த வேண்டியிருந்தது.
தண்ணீர் குடிக்காமல் இருந்தால் ஓட்டத்தை முடிக்க இயலாமல் போய்விடலாம் என்பதால் விரைவில் ஓடி முடிக்கவேண்டும் என்ற உத்வேக உணர்ச்சியைக் கட்டுப்படுத்த நடைமுறையை மனதில்கொண்டு அதற்கேற்ப நடந்துகொண்டதாக அவர் கூறினார்.
மனைவியுடன் அமெரிக்காவுக்கு வந்ததாகக் குறிப்பிட்ட திரு ரமேஷ், அங்கு சிங்கப்பூரர்கள் சிலரின் அறிமுகத்தைப் பெற்றதாகக் கூறினார்.
“அத்துடன் என் நண்பர் கலைச்செல்வன், எனக்குத் தெரியாமல் பாஸ்டனுக்கு வந்து என் ஹோட்டலின் வரவேற்பு அறையில் காத்திருந்து எனக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். இத்தகைய நட்பும் ஆதரவும் கிடைப்பது மிக அரிது,” என்றார் திரு ரமேஷ்.
இந்த ஆறு நெடுந்தொலை ஓட்டத்தை நிறைவுசெய்த முதல் சிங்கப்பூரில் பிறந்த இந்திய இனத்தவர் என்ற முறையிலும் அவர் பெருமை கொள்கிறார்.
இந்த நிதித்திரட்டுக்கு முன்னதாக திரு ரமேஷ், ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ என்ற தம் உல்லாச ஓட்டக்குழுவினருடன் 26 மணி நேரம் ஓடி சிங்கப்பூர் இந்தியக் கல்வி அறக்கட்டளைக்காக ஒரு மாதத்திற்குள் 90,000 வெள்ளி நிதித்திரட்டினார். இது எனக்கு மேன்மேலும் நிதித்திரட்டுகளைச் செய்யவேண்டும் என்ற ஊக்குவிப்பைத் தந்தது என்றார்.
அறிமுகமில்லாத பலர் முன்வந்து ஆதரவுக் கரம் நீட்டியது மனநெகிழ்வைத் தந்ததாக திரு ரமேஷ் கூறினார். தனிப்பட்ட இந்த முயற்சிக்கு இவ்வளவு ஆதரவு சேர்ந்தது மகிழ்ச்சியளிக்கிறது, என்று அவர் கூறினார்.