அகமதாபாத்: கடந்த 2022 அக்டோபர் முதல் இவ்வாண்டு செப்டம்பர்வரை அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகக் கூறி, 96,917 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டதாக அமெரிக்கச் சுங்க, எல்லைப் பாதுகாப்புத் துறைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அவர்களில் 30,010 பேர் கனடா எல்லையிலும் 41,770 பேர் மெக்சிகோ எல்லையிலும் பிடிபட்டனர். மற்றவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்த பிறகு சிக்கியவர்கள்.
2019-20ஆம் ஆண்டில் 19,883ஆக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.
இது பதிவான எண்ணிக்கைதான் என்றும் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் சொல்கின்றன.
“அமெரிக்காவிற்குள் கள்ளத்தனமாக நுழைய முயன்று ஒருவர் பிடிபட்டார் எனில் பத்துப் பேர் வெற்றிகரமாக அந்நாட்டிற்குள் நுழைந்திருப்பர்,” என்கிறார் இந்தியாவின் குஜராத் மாநிலக் காவல்துறை அதிகாரி ஒருவர்.
“அவர்களில் அதிகமானோர் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். எப்படியாவது அமெரிக்காவில் குடியேறிவிட வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர்,” என்று, சட்டவிரோதக் குடிநுழைவுக் கும்பல்கள் குறித்து விசாரித்து வரும் குஜராத் காவல்துறை அதிகாரி ஒருவர் சொன்னார்.
இம்முறை பிடிபட்டவர்களில், துணையின்றிச் சென்ற 730 குழந்தைகளும் அடங்குவர். இத்தகைய ஆபத்தான முயற்சியின்போது சிலர் உயிரை இழந்துவிடுவதும் உண்டு.
ஒவ்வோர் ஆண்டும் குஜராத்தைச் சேர்ந்த பலர் இப்படி அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்று பிடிபட்டாலும் அவர்களில் வெகுசிலரே மீண்டும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர் என்றும் மனிதநேய அடிப்படையில் சிலருக்குப் புகலிடம் வழங்கப்படுகிறது என்றும் அதிகார மட்டங்கள் தெரிவிக்கின்றன.