பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநில அரசாங்க அதிகாரியைக் கொலை செய்ததாக அவருடைய ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிரத்திமா, 45, என்ற அப்பெண் அதிகாரி கர்நாடகச் சுரங்க, நிலவியல் துறையில் பணியாற்றி வந்தார். அவர் பெங்களூரில் பணியாற்றி வந்த நிலையில், அவருடைய கணவரும் மகனும் சிவமோகாவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரத்திமா கழுத்தறுபட்ட நிலையில் தமது வீட்டில் மாண்டு கிடந்தது கடந்த ஞாயிறு காலை 8.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடையே, பிரத்திமாவைக் கொலை செய்ததை அவரிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்த கிரண் என்ற ஆடவர் ஒப்புக்கொண்டார். கிரண் கடந்த ஐந்தாண்டுகளாக அரசாங்க ஒப்பந்த ஊழியராக இருந்து வந்த நிலையில், பிரத்திமா அண்மையில் அவரைப் பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்து, அவரைக் கொலைசெய்ததாக கிரண் காவல்துறையிடம் கூறினான்.
பிரத்திமாவைக் கொலைசெய்தபின் அவன் பெங்களூரிலிருந்து ஏறக்குறைய 200 கி.மீ. தொலைவிலுள்ள சாமராஜநகருக்குத் தப்பியோடியதாக என்டிடிவி செய்தி தெரிவித்தது.