லக்னோ: வங்கியில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்திருந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த ரூ.18 லட்சத்தையும் (S$29,700) கறையான் அரித்துவிட்டது.
இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் நிகழ்ந்தது.
அல்கா பாட்டக் என்ற அப்பெண் வாடிக்கையாளர், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக அப்பணத்தையும் சில நகைகளையும் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்தார்.
தன் மகளின் திருமணத்திற்காக அவர் அதனைச் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், பாதுகாப்புப் பெட்டக வருடாந்திரப் பராமரிப்பை ஒட்டி, அண்மையில் அதனைத் திறந்து பார்த்தபோதுதான் மொத்த பணத்தையும் கறையான் தின்று முடித்திருந்தது தெரியவந்தது.
அதுகுறித்து அவர் உடனடியாக அவ்வங்கிக் கிளை மேலாளரிடம் தகவல் தெரிவித்தார். மேலாளரும் உடனே உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி, நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்பட்டது.
பணத்தை எப்படிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருக்க வேண்டும் என அவர் அறிந்திருக்கவில்லை என்று இந்தியா டுடே செய்தி கூறியது.
முன்னதாக, இவ்வாண்டு பிப்ரவரியிலும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்த ரூ.2.15 லட்சமும் முற்றிலுமாகச் சிதைந்துபோனது.